முல்லைப் பெரியாறு பிரச்சனை : கேரள நிறுவன விளம்பரங்களில் தமிழ் நடிகர்கள் நடிக்கக் கூடாது: செந்தமிழன்

திருச்சியில் தமிழ்க்கலை இலக்கிய பேரவை, மக்கள் உரிமை பேரவை சார்பில் முல்லை பெரியாறு அணை பிரச்சனை தொடர்பான ஆவணப்படம் திரையிடல் மற்றும் சி.டி. வெளியீட்டு விழா நடந்தது. இதில் பாலை பட இயக்குனர் செந்தமிழன் கலந்து கொண்டு பேசியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழக-கேரள எல்லைகள் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. எல்லையில் போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் யாருடைய உத்தரவின் பேரிலும் போராடவில்லை. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சமும், இன உணர்வும் தான் அவர்களை போராட வைத்துள்ளது. இது ஒரு சிறந்த எழுச்சிப் போராட்டம் என்பதை அரசியல் தலைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகளால் ஏன் இப்படி ஒரு போராட்டத்தை ஒருங்கிணைக்க முடியவில்லை. இவ்வளவு நடக்கும்போதும் தமி்ழ் நடிகர்கள் கேரள நிறுவன விளம்பரங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. எனவே, கேரள மாநிலத்தவரின் நிறுவன விளம்பரங்களில் தமிழ் நடிகர்கள் யாரும் நடிக்கக் கூடாது என்று நாம் கோரிக்கை வைப்போம்.
அணை குறித்த மலையாளிகளின் ஆவணப்படம் மிகப் பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகிறது. இது போல் நாமும் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து சுமார் 5 நிமிடங்கள் ஓடும் குறும்படங்களை தயாரித்து அதை சிடி வடிவில் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











