இரண்டு ஆண்டுகள் கடந்தும்.. மனதில் தாக்கம் குறையாத ஒரு வாழ்வியல் காவியம்.. மேற்குத் தொடர்ச்சி மலை
சென்னை : எந்த ஒரு சிறந்த படைப்பும் முற்போக்கான விவாதத்தை சமூகத்தில் தொடங்கி வைக்கும். இந்த தமிழ்ச்சூழலில் அறிவுஜீவிகள் மத்தியில் அப்படி ஒரு விவாதத்தை இத்திரைப்படம் எடுத்துச்சென்றது. தான் சார்ந்த தத்துவத்தின் மாற்றங்களையும் அதன் போதாமையையும் காலத்திற்கேற்ப அது தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் மிக நேர்மையாக விமர்சித்து பதிவு செய்தார் இயக்குனர் லெனின் பாரதி
Recommended Video
நம் தலைமுறையின் சிறந்த தமிழ் திரைப்படம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை என்று பலரும் பாராட்டி கொண்டே தான் இருக்கின்றனர் .இன்னொரு பக்கம் படத்தை மிகவும் ஆழமாக ஒரு கூட்டம் பல விதத்தில் ஆராய்ந்து பலருக்கும் புரியும் படி சமூக அக்கறையுடன் இந்த படத்தை பலருக்கு கொண்டு சேர்க்கின்றனர் .
இன்னுமா பா நீ மலை ஏறுகிறாய் ? என்ற கேள்வி பலருக்கு பல சமயங்களில் பலரை பார்த்து கேட்க வைத்த படம் . பல விருதுகள் வாங்கி இருந்தாலும் மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் இந்த படத்திற்கு கிடைத்த பெரிய விருது.

படம் அல்ல வாழ்க்கை
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒரு கூலித் தொழிலாளியின் வாழ் நாள் ஆசை ஒரு துண்டு நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்று. ஒரு சாமானியனின் ஆசையை இந்த சமுதாயம் எந்த நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது என்பதே. படத்தின் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் மனதில் இருந்து நகராமல் இடம் பிடித்துக்கொண்டார் படத்தின் கதாநாயகன் ஆண்டனி. அந்த படத்தில் அவர் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அழுத்தமான கதை
இது வெறும் டாகுமெண்டரி ஸ்டைல் படம் என்று அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது . படம் ரீலீஸ் ஆன போது பலர் குடும்பங்களுடன் சென்று பார்த்து இந்த படத்தில் பாதிப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து நிறைய குடும்பங்கள் தொடர்ந்து படத்தை பார்க்க காரணமாக இருந்தது படத்தின் அழுத்தமான கதை. ஒவ்வொரு குடும்பங்களின் நிறைவேறாத ஆசையை திரையில் கண்பதுபோல ஓர் உணர்வை ஏற்படுத்தியதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.

உருண்டு விழந்த மனங்கள்
மலையேறி மலையேறி வளைந்த முதுகு, நடந்து நடந்து தேய்ந்த பாதம் வாழ்க்கையில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற போராட்ட கதைக்களமே இப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மலையில் இருந்து, ஏலக்காய் மூட்டை மட்டும் உருண்டு விழவில்லை. அதை திரையில் பார்த்த அத்தனை மனங்களும் உருண்டு விழந்தன அந்த இறுதிக்காட்சியில். ஏழைகளின் வாழ்க்கையை ,அடித்தட்டு மக்களின் குரலாக அமைந்த காட்சிகள் மற்றும் உண்மை சம்பவங்கள் பல வற்றி தோல் உரித்து காட்டிய விதம் இன்னும் கண்ணைவிட்டு மறையவில்லை.

மனதில் ஒருவித சோகம்
படத்தின் கதாநாயகனும் , அவனை சுற்றி இருக்கும் ஏக்கங்களும் , அவன் கடந்து வந்த பாதையும் எத்தனையோ கஷ்டங்களை நம் கண் முன் நிறுத்தி மனதை உருக்க செய்யும் . இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் இந்த படம் இன்னும் எத்தனையோ பள்ளி மாணவர்களுக்கு ஒரு புரிதலை கொடுத்து உள்ளது. வேகமாக கார் மற்றும் பஸ் பயணங்கள் மேற்கொள்ளும் போது திடீர் என்று தென்படும் காற்றாலைகள் நம் மனதில் ஒரு விதமான சோகத்தை ஏற்படுத்தி இந்த படத்தை ஞாபகப்படுத்த தான் செய்கிறது . இது தான் இந்த படத்திற்கும் இந்த படத்தின் இயக்குருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி . விஜய் சேதுபதி ப்ரொடுக்ஷன்ஸ் வந்த இந்த படம் இன்னும் பல ஆண்டுகள் பேசும் என்பது தான் நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications











