twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கமுத்துவை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்பு- நிபந்தனை ஜாமீன்

    By Sudha
    |

    Singamuthu
    நடிகர் சிங்கமுத்துவை போலீஸ் காவலில் அனுமதிக்க சென்னை சைதாப்பேட்டை கோர்ட் மறுத்து விட்டது. மாறாக அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.

    வடிவேலு, சிங்கமுத்து மீது நிலமோசடி புகார் ஒன்றை கொடுத்தார். அதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் சிங்கமுத்து முன்ஜாமீன் பெற்றார்.

    பின்னர் கிரிமினல் வழக்கு ஒன்றையும் வடிவேலு சிங்கமுத்து மீது தொடர்ந்தார். அந்த வழக்கும் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில் அவர்களுக்குள் மீண்டும் மோதல் வெடித்தது.

    சென்னை சாலிகிராமத்தில் நடிகர் வடிவேலுவின் வீட்டின் எதிரில் வசிக்கும் சினிமா தயாரிப்பாளர் கண்ணன் என்பவர் ஒரு புகார் மனுவை சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து கொடுத்தார். இவர் நடிகர் சிங்கமுத்துவை வைத்து படமெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்ணன் கொடுத்த புகார் மனுவில், தனது வீட்டில் 10 பேர் கொண்ட கும்பலினர் புகுந்து தனது மாமனார் உள்பட வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு ஓடி விட்டனர். சிங்கமுத்துவை வைத்து படம் எடுப்பதால், வடிவேலுவின் ஆட்கள் அடிக்கடி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று புகார் மனுவில் கூறி இருந்தார்.

    இந்த புகார் மனு அடிப்படையில் உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில், விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து, தண்டையார்பேட்டையை சேர்ந்த சத்தியேந்திரன் என்ற ராஜாவை கைது செய்தார். இவர் எம்.பி. ஒருவரிடம் வேலை பார்க்கிறார். இவர் தவிர மேலும் 9 பேர் மீதும் வழக்கு போடப்பட்டது.

    இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் உதவி மானேஜர் சங்கர் என்பவரும் அதிரடியாக ஒரு புகார் மனுவை விருகம்பாக்கம் போலீசில் கொடுத்தார். அந்த புகார் மனுவில், சிங்கமுத்து தூண்டுதலின் பேரில் சினிமா தயாரிப்பாளர் கண்ணன் தனது ஆட்களுடன் வந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார் என்று குறிப்பிட்டார்.

    இதையொட்டி நடிகர் சிங்கமுத்து, படத்தயாரிப்பாளர் கண்ணன் உள்பட 10 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் புதிய வழக்கு ஒன்றையும் பதிவு செய்தனர்.

    இந்த புதிய வழக்கில் நடிகர் சிங்கமுத்துவும், தயாரிப்பாளர் கண்ணனும் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் மீண்டும் சிங்கமுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வடிவேலு கொடுத்த புகாரின்படி விருகம்பாக்கம் போலீசார் சிங்கமுத்துவை திடீரென்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் அனுமதிக்கக்கோரி காவல்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

    அதேபோல சிங்கமுத்துவும் ஜாமீன் கோரி மனுசெய்தார். இரு மனுக்களும் சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் காவலில் போக விரும்பவில்லை என்று அப்போது சிங்கமுத்து கூறினார். அதேபோல போலீஸ் காவலில் அனுமதிக்க அவரதுவக்கீலும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதை ஏற்ற நீதிபதி, போலீஸ் காவலில் அனுமதிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி போலீஸ் கோரிக்கையை நிராகரித்தார். மேலும் சிங்கமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீனும் அளித்து உத்தரவிட்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X