நடிகர் சிவா மீதான புகாரை வாபஸ் பெற்றார் மனைவி-விடுதலை செய்ய உத்தரவு

ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் சிவா. அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இவரது மனைவி மீனாட்சி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் மீனாட்சி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவா மீது சித்திரவதை செய்து கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் புகார் கூறினார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவாவைக் கைது செய்தனர். பின்னர்அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சிவா மனு தாக்கல் செய்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் பிரியா முன்னிலையில் ஆஜரான மீனாட்சியின் வழக்கறிஞர் ஆனந்தன், சிவாவுக்கு ஜாமீன் வழங்க தாங்கள் எதிர்க்கவில்லை என்று கூறினார்.
பின்னர் மீனாட்சி நேரில் ஆஜரானார். அவர் மாஜிஸ்திரேட்டிடம், குழந்தைகளின் நலன் கருதி கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். வழக்கையும் வாபஸ் பெற விரும்புகிறேன் என்றார். இதையடுத்து சிவா மீதான வழக்கை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications