தமிழக தியேட்டர்களில் இனி இரவு காட்சி ரத்து!

தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், தினமும் 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. காலை காட்சி 12 மணிக்கும், பகல் காட்சி 3 மணிக்கும், மாலை காட்சி 6-30 அல்லது 7 மணிக்கும், இரவு காட்சி 10 அல்லது 10-30 மணிக்கும் நடத்தப்படுகின்றன.
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பிற்பகல் 2-30, மாலை 6-30, இரவு 10-30 என தினமும் 3 காட்சிகள் நடத்தப்படுகின்றன.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை நகரங்களில் மட்டும் இரவுக்காட்சி கிடையாது.
காலியான அரங்குகள்
மேலும் இரவு 10-30 மணி காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இரவு காட்சி முடியும்போது நள்ளிரவு ஆகிவிடுவதால், அந்த காட்சிக்கு வருவதை பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை கருதி, இரவுக் காட்சிக்கு வருவதில்லை.
இதனால், தியேட்டர்களில் இரவு காட்சிக்கு கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நிறைய தியேட்டர்களில் இரவு காட்சிக்கு நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே வருகிறார்கள்.
இப்போது பனிக்காலமாக இருப்பதால், இரவில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்கிறார்கள். தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. சென்னையில் மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் மட்டும் இரவுக் காட்சிக்கு ஓரளவு கூட்டம் வருகிறது.
இரவு காட்சி ரத்து
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில், இரவு காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. நிரந்தரமாக அந்த காட்சியை ரத்து செய்வது பற்றியும், பெங்களூரைப்போல் காட்சி நேரத்தை மாற்றி அமைப்பது பற்றியும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரில் காலை காட்சி 11 மணிக்கும், பகல் காட்சி 2 மணிக்கும், மாலை காட்சி 4 மணிக்கும், இரவு காட்சி 7 மணிக்கும் நடத்தப்படுகின்றன.
இதேபோல காட்சி நேரத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக பல்வேறு திரையரங்க சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











