விபத்தில் ரசிகர் மரணம்: ரஜினி அனுதாபம்!
சென்னை: மதுரையில் ரசிகர் கார்த்திக் விபத்தில் மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் வெளியிட்டுள்ளார் ரஜினி. விரைவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் திருமணத்துக்காக மதுரை சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அப்போது அவரது காரைப் பின் தொடர்ந்து ரசிகர்கள் வந்த டாடா சுமோ வாகனம், டிரைவரின் அலட்சியத்தால் விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திக் என்ற ரசிகர் மரணம் அடைந்தார்.
இந்தச் செய்தி அறிந்து அனுதாபம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார் ரஜினி. அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மதுரை தெற்குவாசல் 45-வது வார்டு ரஜினி மன்ற துணைத்தலைவர் ஆர்.எம்.கார்த்திக்கின் அகால மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











