ரஜினியைப் பார்க்க பெங்களூரிலிருந்து வந்த 200 ரசிகர்கள்!
சென்னை: உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியைக் காண 20 வேன்களில் 200 ரசிகர்கள் பெங்களூரிலிருந்து வந்துள்ளனர்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினி கடந்த 13-ந் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினியின் உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்தியால் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
அவர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை, அங்க பிரதட்சணம், மண்சோறு சாப்பிட்டும் வருகிறார்கள். தினமும் ஏராளமான ரசிகர்கள் ரஜினி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு அவரை பார்க்க வருகிறார்கள். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.
இந்த நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து அறிந்த பெங்களூர் ரசிகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர், வேன்-ரெயில்களில் சென்னை வந்தனர். அவர்கள் ரஜினி சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திர மருத்துவமனை முன்பு திரண்டு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு ரஜினி நலம் பெற வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது கையில் ரஜினி மன்ற கொடியும், பதாகைகளும் வைத்து இருந்தனர். பெங்களூரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினி நலமுடன் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அவரை பார்க்கும் ஆசையில் பெங்களூர் சேஷாத்திரி நகர், அல்சூர், ஏர்போர்ட் சாலை பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று சென்னை வந்து உள்ளோம்.
ஆனால் ரஜினியை பார்க்க மருத்துவமனை உள்ளே அனுமதிக்கவில்லை. இது வருத்தமாக உள்ளது. எப்படியோ, அவர் குணம் அடைந்தாலே போதும்," என்றார்.


Click it and Unblock the Notifications











