தமிழ் சினிமா நிஜ நிலமை: 5 மாதங்களில் ரூ 200 கோடி இழப்பு - கேயார்
சென்னை: கடந்த 5 மாதங்களில் ரூ 200 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது தமிழ் சினிமா என்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
ஒரு பக்கம் தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஆண்டு 200 படங்கள் வெளியாகும் என்ற சூழல்.

ஆனால் வெளியாகும் படங்களில் 10 சதவீதம்கூட தேறாத நிலை. சேட்டிலைட் உரிமை என்ற ஒரு விஷயம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பல தயாரிப்பாளர்கள் சொந்த ஊருக்கே ஓடிப் போயிருப்பார்கள்.
இந்த நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஒரு விழாவில் பேசுகையில், "சினிமாவை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ஏதேதோ ஆசையில் சினிமா எடுக்க வருகிறார்கள். இதை ஒரு பக்காவான தொழிலாகப் பார்த்து, திட்டமிட்டு யாரும் சினிமா எடுப்பதில்லை. அதுதான் பிரச்சினை.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் தொடக்கம் மோசமாக உள்ளது. படங்கள் சரிவர ஓடாததால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழ் பட உலகுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிகவும் மோசமாக இருக்கிறது. சென்ற ஆண்டு 164 படங்கள் வெளிவந்தன. ஆனால் இன்னும் 200 படங்கள் சென்சார் சான்று வாங்கியும் வெளிவர முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன," என்றார்.


Click it and Unblock the Notifications











