2015: முடிவுக்கு வந்த 'பிரபலங்களின்' காதல்கள்
சென்னை: இந்த 2015 ம் ஆண்டில் சாந்தனு, கணேஷ் வெங்கட்ராம் என்று ஏராளமான பிரபலங்களின் காதல் திருமணங்கள் கோலிவுட்டில் நடைபெற்றன.
அதே நேரத்தில் காதலித்து, திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சில பிரபலமான ஜோடிகள் தங்களது காதலை இந்த வருடத்தில் முறித்துக் கொண்டனர்.
இந்த ஆண்டில் முடிவுக்கு வந்த சில பிரபல ஜோடிகளின் காதல் முறிவு குறித்து பார்க்கலாம்.

சித்தார்த் - சமந்தா
ஏற்கனவே திருமணம் செய்து மனைவியைப் பிரிந்த சித்தார்த்தை உருகி, உருகி காதலித்து வந்தார் சமந்தா. இதே போல சமந்தா என்ன கூறினாலும் அதற்குப் பதிலளித்து மறைமுகமாக காதலை வளர்த்தார் சித்தார்த். இருவரும் மண வாழ்க்கையில் இணைய வேண்டி ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியில் சிறப்புப் பரிகார பூஜைகளையும் மேற்கொண்டனர். இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக காதலை வளர்த்து வந்த இந்த ஜோடியின் மீது யார் கண்பட்டதோ இந்த வருடத்தில் இருவரின் காதலும் தற்போது முடிவுக்கு வந்து விட்டது.
இதில் உச்சகட்டமாக இருவரும் ட்விட்டரில் வேறு சண்டையிட்டுக் கொண்டனர். தற்போது சித்தார்த் நிவாரணப் பணிகள் என்று பிஸியாக இருக்க, சமந்தா தனது அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

சிம்பு - ஹன்சிகா
வாலு படத்தின் போது ஏற்பட்ட நட்பு காதலாக மாற ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று சிம்பு - ஹன்சிகா இருவருமே ஒத்துக் கொண்டனர். நன்றாக சென்று கொண்டிருந்த இந்தக் காதல் இந்த வருடத்தில் முடிவுக்கு வந்தது. 5 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் என்று ஹன்சிகா கூறியது தான் முறிவிற்கு காரணம் என்று ஒரு பேச்சு அடிபட்டது.
காதல் முறிந்து போனாலும் வாலு படத்தை வெளியிட வேண்டி ஹன்சிகாவும் தன்னால் இயன்ற அளவு தேதிகள் ஒதுக்கி நடித்துக் கொடுத்தார். இதனால் இருவரும் மீண்டும் சேருவார்கள் என்று ஒரு பேச்சு அடிபட்டது. அதுபோல எதுவும் நடக்கவில்லை எனினும் ஹன்சிகா தமிழில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வர, சிம்புவுக்கு படம் வெளியாவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

த்ரிஷா - வருண் மணியன்
தாஜ்மஹாலுக்கு தனி விமானத்தில் சென்று தங்களது காதலை வெளிப்படுத்தியது த்ரிஷா - வருண் மணியன் ஜோடி. ஊரறிய பிரமாண்டமாக நிச்சயதார்த்தத்தை நடத்தி அசத்தினார் வருண் மணியன். இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நடந்த இந்த நிச்சயதார்த்தம் ஒருசில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. இந்த திருமண முறிவிற்குப் பின் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக த்ரிஷா பேட்டிகள் கொடுக்க, இந்த நிச்சயதார்த்தத்தால் வெளியில் பெயர் பிரபலமானது தான் மிச்சம் என்று அடுத்த வேலையைப் பார்க்க சென்று விட்டார் வருண் மணியன்.

பிரியா ஆனந்த் - கவுதம் கார்த்திக்
இதைத் தவிர வெளியில் வராத காதல் ஒன்றும் இந்த வருடத்தில் முடிவுக்கு வந்தது. பிரியா ஆனந்த் - கவுதம் கார்த்திக்கின் காதல் தான் அது. இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் லிவிங்டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இருவரும் இதனை இல்லை என்று மறுக்கவும் இல்லை ஆமாம் என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை. வை ராஜா வை படத்தில் கவுதம் கார்த்திக்கின் ராசி பிரியா ஆனந்தையும் காலி செய்ததில் மூட்டை முடிச்சுகளுடன் அமெரிக்காவுக்கு சென்று விட்டார் பிரியா ஆனந்த்.


Click it and Unblock the Notifications