2 தொழிற் சாலைகளில் 7 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்: 3 பேர் கைது
சென்னை: சென்னையில் பல இடங்களில் புதுப்பட திருட்டு சி.டி.விற்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந் நிலையில் மண்ணடி, கொடுங்கையூரில் திருட்டு சி.டி. தயாரிக்கும் தொழிற் சாலை ஒன்று இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸ் படை விரைந்து சென்று சோதனை நடத்தியது.
கொடுங்கையூர் அருந்ததி நகரில் திருட்டுத்தனமாக சி.டி. தொழிற்சாலை ஒன்று இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், அங்கு ராவணன், களவானி, மதரசாப்பட்டினம் உள்ளிட்ட புதுப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.
இந்த தொழிற்சாலையை நடத்தி வந்த முகமது இப்ராகிம் (51) என்பரையும் கைது செய்தனர். இது போன்று மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் திருட்டு சி.டி. தொழிற் சாலை நடத்திய நாகூர் மீரான் (65), இளையராஜா (25) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புதுப்பட மற்றும் ஆபாச சி.டி.க்கள், சி.டி. ரைட்டர், பிரிண்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த 2 தொழிற் சாலைகளில் இருந்தும் சுமார் 7 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











