இயக்குநர் பீம்சிங் மனைவி மரணம்!
பழம்பெரும் இயக்குநர் அமரர் பீம்சிங்கின் மனைவி சோனம்மாள் (85) செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார்.
பதிபக்தி, பாகப்பிரிவினை, பாலும் பழமும், பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பழனி உள்பட ஏராளமான படங்களை இயக்கியவர் மறைந்த பீம்சிங். இவருடைய மனைவி சோனம்மாள். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் அடைந்தார்.
மறைந்த சோனம்மாளுக்கு வயது 85. அவருக்கு நரேந்திரன், லெனின், இருதயநாத், கண்ணன், திலீப்குமார், கோபி என்ற 6 மகன்களும், சாந்தி, சுஜரிதா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். லெனின் பிரபல திரைப்பட எடிட்டராகவும், பீ கண்ணன் ஒளிப்பதிவாளராகவும் உள்ளனர்.
சோனம்மாளின் உடலுக்கு பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எஸ்.ராமநாதன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மாலைவைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அவருடைய உடல் தகனம் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications











