ராஜ் டி.விக்கு எதிரான எம்ஜிஆர் பிக்சர்ஸ் வழக்கு தள்ளுபடி!
எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய படங்களை ராஜ் டிவி ஒளிபரப்பு செய்யக்கூடாது என எம்ஜிஆர் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய 'உலகம் சுற்றும் வாலிபன்', 'அடிமைப்பெண்' (தயாரிப்பு எம்ஜிஆர், இக்கம் கே சங்கர்), 'நாடோடி மன்னன்' ஆகிய 3 படங்களின் உரிமை ராஜ் டிவியிடம் உள்ளது. இதற்கு தடை கோரி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு விசாரித்து, நேற்று இறுதித் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். பிலிம்ஸ் நிறுவனமும், ஓ.கே. பிலிம்ஸ் நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இந்த 3 படங்களின் பட உரிமை ஓ.கே.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உரிமையை ஓ.கே.பிலிம்ஸ் நிறுவனம், ராஜ் டி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இந்த இரண்டு நிறுவனமும் 3 படங்களுக்காக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளன.
இந்த உரிமையை தடை செய்யக்கோரி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததின் மூலம் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தவறாக பயன்படுத்தியுள்ளது தெளிவாகிறது.
இதில் எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லை. ஆகவே, தடை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ராஜ் டி.வி. பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து இந்த 3 படங்களின் மீதான உரிமையைப் பயன்படுத்தலாம். இதில் யாரும் தலையிட அனுமதியில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











