திருட்டு விசிடி: நாளை பட அதிபர்கள் கூட்டம்!

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கி, 30 வருடங்கள் ஆகிவிட்டது. இன்று உலக தரத்தில் தமிழில் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆங்கில படங்களுக்கு நிகரான படங்களை தமிழ் திரையுலகம் தயாரித்து வெளியிட்டு வருவது பெருமையாக உள்ளது.
இதற்கு காரணம் தமிழக அரசும், முதல்-அமைச்சர் கருணாநிதியும் அளித்து வரும் ஆதரவும், சலுகைகளும்தான் என்றால், அது மிகையாகாது. கடந்த வருடம் 119 நேரடி தமிழ் திரைப்படம் தயாரித்து வெளிவந்துள்ளது. படப்பிடிப்பு கட்டணங்களை குறைத்து, தமிழில் படங்கள் அதிகமாக வெளிவர, முதல்-அமைச்சர் கருணாநிதியே காரணம்.
திருட்டு விசிடி:
இருப்பினும், தயாரிப்பு செலவு அதிகமாக வந்துள்ளது. அதற்குண்டான வசூல் வருவதில்லை. இதற்கான காரணம் என்ன, திருட்டு வி.சி.டி. கூட்டத்தை ஒழிப்பதற்கு வழி என்ன, அரசாங்கம் அளித்து வரும் சலுகைகளை தயாரிப்பாளர்கள் அனுபவிப்பதற்கும், பொதுமக்கள் பலன் அடைவதற்கும் மார்க்கம் என்ன?
இதற்காகவும், திரையுலகின் நன்மைக்காகவும், மேலும் பல பரபரப்பான முக்கிய முடிவுகள் எடுப்பதற்காகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூடுகிறது. இந்த கூட்டம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில், பிலிம்சேம்பர் திரையரங்கில் நடைபெற உள்ளது.
தொழிலை நேசித்தும், சுவாசித்தும் படம் தயாரிக்கும் சங்க தயாரிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று அதில் கூறியுள்ளார் ராம நாராயணன்.


Click it and Unblock the Notifications











