சிவகுமார் பேச்சு... ஒரு சர்ச்சையும் விளக்கமும்!
அவரது ராமாயண சொற்பொழிவு பெரிதும் ரசித்துப் பாராட்டப்பட்டது. வரலாற்று நாயகர்கள் குறித்தும் இப்போது நிறைய பேசி வருகிறார்.
பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதுபோல, அவர் எல்லா மேடைகளிலுமே சில விஷயங்களைக் கூறுகிறார். அப்படி அவர் சொன்ன சில கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
6 மாதங்களுக்கு முன் அவர் ஒரு விழாவில் பேசியபோது, ஒரு கணிணி மென்பொருள் நிறுவன கழிப்பறையில் ஏராளமாய் கருத்தடைச் சாதனங்கள் கிடந்ததைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
அடுத்ததாக, "பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கணும்", என்று அன்றைய ரசிகைகள் சிலர் சொன்னதாக சிவகுமார் குறிப்பிட்டிருந்தாராம்.
குடும்பப்பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் இப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு அனுமதி கேட்டதை சிவகுமார் காதுகொடுத்துக் கேட்டாரா? என்று கேள்வி எழுப்பி, இதற்காக சிவகுமார் மன்னிப்புக் கோர வேண்டும் என்று சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "இது விதண்டாவாதம். சிவகுமார் வெறும் விளம்பரத்துக்காக பேசக்கூடிய மனிதரல்ல. அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. எப்போதும் மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பவர். அவர் பேச்சு அடங்கிய முழு வீடியோவும் கடந்த 6 மாதங்களாகவே அனைத்து இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. டிவியிலும் வந்துள்ளது. அதைக் கேட்டுப் பார்த்தால், அவர் பேச்சு எந்த அளவு சரியானது என்பது புரியும்.
அவரது பேச்சை அத்தனை மாணவிகளும், பெற்றோர்களும் கைத்தட்டி வரவேற்றனர். அவர் தவறாகவோ யாரையும் இழிவுபடுத்துவதுபோலோ பேசியிருந்தால் அமைதியாக இருந்திருப்பார்களா...
விமர்சகர்கள் குற்றமாகக் குறிப்பிடுவது சிவகுமாரின் கருத்தல்ல. கருத்தடைச் சாதனம் பற்றி அவர் சொன்னது நாளிதழ்களில் வெளியான செய்தி. அதேபோல, அந்தக் காலத்தில் இருந்த பிரபல சினிமா கதாநாயகனுக்கு பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான மோகத்தைச் சுட்டிக்காட்டவே இந்த உதாரணத்தை அவர் சொன்னார். அதை வைத்து அவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அப்படிச் சொன்னார் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து, அதே நேரம் சொல்லும் விஷயம் எளிதில் சமூகத்துக்கு போய்ச் சேர வேண்டும் என்பதற்காக ஊடகங்களில் வரும் தகவல்களை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டார் அவர்.
காதல் திருமணங்களை அவர் பொதுவாகக் குறை சொல்லவில்லை. சமூகத்தில் ஓரிருவர் தவறிப் போய் தப்பான வழியில் செல்வதைக் குறிப்பிட்டு, மாணவிகள் எக்காரணம் கொண்டும் சறுக்கி விடக்கூடாது என்றுதான் அறிவுரை சொன்னார்.
அதைப் போய் தவறாக சித்தரித்து சர்ச்சை கிளப்புவது சரிதானா... இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால், தமிழ் இலக்கிய மேடைகளில் ஒருவரும் பேச முடியாமல் போகும். முதலில் அவர் பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு விமர்சிக்கவும்," என்கிறது சிவகுமார் தரப்பு.


Click it and Unblock the Notifications












