மஞ்சுளா, விஜயகுமாருக்கு முன்ஜாமீன்: பேரன் விஷயத்தில் தலையிடக் கூடாது என நிபந்தனை!

நடிகர் விஜயகுமார் வீட்டில் கடந்த நவம்பர் 7-ம் தேதி நடிகை வனிதாவின் கணவர் ஆனந்தராஜனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசில் வனிதா புகார் செய்தார். பின்னர் விஜயகுமார் தரப்பில் ஆனந்தராஜன், வனிதா மீது புகார் செய்யப்பட்டது. விஜயகுமார் புகாரின்பேரில் ஆனந்த ராஜைக் கைது செய்த போலீஸ், வனிதாவின் புகாரின் பேரில் விஜயகுமார் உள்ளிட்டோரைக் கைது செய்யவில்லை.
இதனால் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் வனிதா. இந்த வழக்கில் விஜயகுமார், மஞ்சுளா, நடிகர் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு 2 பேரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
"இந்த வழக்கில் கைது செய்யப்பட்டால் சமுதாயத்தில் எங்களுக்கு இருக்கும் மரியாதை, நற்பெயர் கெட்டுவிடும். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் தந்து உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இவர்களுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று வனிதா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
விஜயகுமார், மஞ்சுளா ஆகியோருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் நிலையத்தில் இருவரும் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும். வனிதாவின் குழந்தை விஜய் ஸ்ரீஹரியை பராமரிப்பது யார்? என்ற விவகாரத்தில் இருவரும் தலையிடக்கூடாது என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.


Click it and Unblock the Notifications











