சினிமாக்காரர்களுக்கு பையனூரில் 75 ஏக்கர் நிலம்!

சென்னைக்குப் பக்கத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்கக் கூட வக்கற்றுப் போய் மக்கள் புலம்பிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு சென்னையை அடுத்த பையனூர் அருகே 75 ஏக்கர் நிலத்தை ஓசியில் (ஒப்புக்கு ஒரு தொகையை நிர்ணயித்துள்ளார்கள்) கொடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. இதற்கான அறிவிப்பை அமைச்சரவைக் கூட்ட முடிவில் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எடுத்துள்ள முடிவின்படி, சினிமாக்காரர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டம், பையனூர் கிராமத்தில் 75 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது அரசு.
இதில் நடிகர், நடிகைகள் மற்றும் பெப்சி உறுப்பினர்கள் 50 ஏக்கரில் வீடு கட்டிக் கொள்வார்களாம். இன்னொரு 15 ஏக்கர் அவர்களின் பொதுவான பயன்பாட்டுக்காம்.
இந்த நிலத்துக்கு குத்தகையாக ஆண்டுக்கு ரூ.1.000 மட்டும் செலுத்தினால் போதுமாம். அதுவும் 99 ஆண்டுகளுக்கு குத்தகையாம் (நடுவில் யாராவது ஒரு தலைவரின் பிறந்த நாளன்று தள்ளுபடி செய்துவிட்டால் போயிற்று!). இந்த இடத்தை சினிமாக்காரர்களின் பிரதிநிதிகளே நேரில் போய் ஆ.....ய்வு நடத்தி தேர்வு செய்து முதல்வருக்குச் சொன்னார்களாம்.
இதைவிட முக்கியம், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. நிலத்தின் வழிகாட்டு மதிப்பில் 3.5 சதவிகிதம் மட்டும் இதற்கு ஆண்டு குத்தகையாக அந்த 'ஏழைகளிடம்' பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது அமைச்சரவை.
இந்த நிலம் தவிர மேலும் 41 ஏக்கர் நிலப்பரப்பை தேடி வருகிறாராம் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன். இந்த இடமும் ஒரே பரப்பாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவித்தாராம். எனவே கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் நிலம் தேடி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











