முறம் - துடைப்பத்துடன் ரோஜாவை எதிர்த்த கிராமத்தினர்!!

ஆந்திர மாநிலம் சந்திரகிரி சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார். அவருக்கு கடுமையான சவால் தரும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுகாதாரத்துறை மந்திரி கல்லா அருணகுமாரி களத்தில் இருக்கிறார். கடந்த தேர்தலிலும் இவர் இதே தொகுதியில் போட்டியிட்டு 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவருடைய தந்தை ராஜகோபால் நாயுடு இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 முறை வெற்றி வாகை சூடினார்.
இந்த தொகுதியில் பிரஜா ராஜ்யம் (சிரஞ்சீவி) கட்சி சார்பில் சாயி ரமணி ரெட்டி போட்டியிடுகிறார்.
முறம் - துடைப்பம் காட்டி எதிர்ப்பு!!
நடிகை ரோஜா தேர்தல் பிரசாரம் செய்ய அந்த தொகுதியில் உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எர்ராவாரி பாளையம் மண்டலம் எஸ்.டி.காலனியை சேர்ந்த மக்கள் ரோஜா அங்கு பிரசாரம் செய்ய வருவதை அறிந்து, வீடுகளைப் பூட்டிக் கொண்டு வெளியேறி விட்டனர்.
மீதமுள்ள சிலர் ரோஜா பிரசாரத்திற்கு வரக்கூடாது என்று துடைப்பம், முறங்களை காட்டி எச்சரித்தனர்.
இதற்கு ரோஜா, 'ஓட்டு போடுவதும், போடாததும் உங்கள் விருப்பம். ஆனால் தேர்தல் பிரசாரம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. என்னை எப்படி நீங்கள் தடுக்கலாம்?' என்று எதிர் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் காங்கிரஸ் கட்சியினரை ரவுடிகள் என்றும், அவர்களை விரட்டி அடியுங்கள் என்றும் கடுமையாக தாக்கி பேசினார்.
திரண்டுவந்த காங்கிரசார்!
இதைக் கேள்விப்பட்டு காங்கிரசார், வெங்கட்ராம் ரெட்டி தலைமையில் திரண்டு சென்று ரோஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ரோஜா அப்படி எதுவும் பேசவில்லை என்று அவருடைய சகோதரர் ராம்பிரசாத் ரெட்டி மறுப்பு தெரிவித்தார். அப்போது காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களிடையே வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திர நாயுடு விரைந்து சென்று இரு கட்சியினரையும் விரட்டியடித்தார். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் போலீஸ் நிலையத்திலும், சித்தூர் மாவட்ட கலெக்டரிடமும் புகார் செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Click it and Unblock the Notifications











