'தில்லாலங்கடி' படத்தில் சோனியா பற்றி வசனம்-காங் போராட்டம்

ஜெயம் ரவி, தமன்னா ஜோடியாக நடித்த தில்லாலங்கடி படம் இன்று ரிலீசானது. இந்தப் படத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
ஜெயம் ரவியிடம் தமன்னா, ''வாழ்க்கையில் போலீஸ் அதிகாரியாகவோ அல்லது சாப்ட்வேர் என்ஜினீயராகவோ ஆவதற்கு லட்சியம் வேண்டும்'' என்று கூறுகிறார். அதற்கு ஜெயம் ரவி பதில் அளிக்கையில், ''எனக்கும் நீ கட்சித் தலைவர் சோனியா காந்தியாகவோ, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவாகவோ ஆக வேண்டும் என ஆசை இருக்கு'' என்று பதிலளிப்பது போல வசனங்கள் உள்ளன.
இது சோனியாவையும் சானியாவையும் கிண்டல் அடிக்கும் தொனியில் இருப்பதால் காங்கிரசார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'தில்லாலங்கடி' என்ற திரைப்படத்தின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த விளம்பரத்தில் தேவையற்ற முறையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையை ஏற்று மத்திய அரசை வழிநடத்திச் செல்லும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் அடங்கிய வசனத்தோடு திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
நாகரீகமற்ற இந்தச் செயலை காங்கிரஸ் தொண்டர் எவரும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
சோனியா காந்தியை களங்கப்படுத்தும் அந்த வசனத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அந்தத் திரைப்படத்திலுள்ள அந்த வசனத்தை நீக்கிவிட்டு திரையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரசார் போராட்டம்:
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு தலைவர் தணிகைமணி தலைமையில் காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்திய மூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு அண்ணா சாலையில் தில்லாலங்கடி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு ஊர்வலமாக சென்றனர். தியேட்டர் எதிரில் நின்று கோஷம் எழுப்பினர். போஸ்டர்களையும் கிழித்தனர்.


Click it and Unblock the Notifications