திருட்டு விசிடியை ஒழிக்க முதல்வர் உதவ வேண்டும்-நடிகர்கள் கோரிக்கை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று கனிமொழி சினிமாப் பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர்கள் விஜய்யும், பார்த்திபனும், திருட்டு விசிடி ஒழிப்பு குறித்துப் பேசினர்.
இதுகுறித்து நடிகர் விஜய் பேசுகையில், கலைஞர் திரைப்பட துறைக்கு பல சலுகைகளை வழங்கியிருக்கிறார். திருட்டு வி.சி.டி.க்கு எதிராக தமிழக அரசு எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தும், அது முற்றிலுமாக ஒழியவில்லை. முன்பு பட அதிபர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்தார்கள். இப்போது கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறார்கள்.
அவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். கலைஞர் டாக்டராக இருந்து நல்ல மருந்து கண்டுபிடித்து, திருட்டு வி.சி.டி. என்ற நோயை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்றார்.
அதேபோல பார்த்திபன் பேசுகையில், திருட்டு வி.சி.டி.யில் கொண்டுவந்து, அந்த படத்தை ஓடவிடாமல் செய்துவிடுகிறார்கள். திருட்டு வி.சி.டி.க்கு எதிராக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் வி.சி.டி. திருடர்கள் ஓயவில்லை. அவர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











