பழம்பெரும் நடிகை எஸ் வரலட்சுமி மரணம்!

சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு இறந்தார்.
1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.
சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.
இவர் பாடிய 'இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்....' என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருக வைப்பது.
அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.
திருடாதே, கந்தன் கருணை, சினிமா பைத்தியம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனின் மனைவி வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இறுதிச் சடங்கு புதன்கிழமை (இன்று)மாலை நடைபெறுகிறது. தொடர்புக்கு, தொ.பே. எண்: 044-28170458


Click it and Unblock the Notifications











