அசின் உதவியாளர் தூத்துக்குடியில் பதுங்கல்

தமிழில் கஜினி, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு இருப்பவர் அசின். சமீபத்தில் இவர் அமீர் கானுடன் நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக் வசூலில் சக்கைபோடு போட்டது. இதையடுத்து தற்போது அவர் பாலிவுட்டில் பிசியாக இருக்கிறார். இவரது உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார் (30).
கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்லமுத்துக்குமாரின் தாயார் சுடலை வடிவு என்பவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம், தனது மகன் நல்லமுத்துக்குமார் மும்பையில் நடிகை அசின் உதவியாளராக பணியாற்ற சென்றார். பின்னர் அவர் திடீரென காணாமல் போய்விட்டார் என புகார் கொடுத்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய புற நகர் கமிஷனர் ஜாங்கிட் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பொன்னேரி டிஎஸ்பி ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சென்று நல்லமுத்துக்குமார் நண்பர்களான மாதவன் மற்றும் கேசவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நல்லமுத்துக்குமார் அடிக்கடி அவர்களிடம் மொபைலில் இருந்து அடிக்கடி பேசியது தெரியவந்தது. மேலும் அவர் சென்னையில் இருந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் நல்லமுத்துக்குமார் தனது தாயார் சுடலைவடிவிடம் ரூ 2000 பணம் பெற்றுள்ளதும் தெரியவந்தது. சென்னையில் இருந்து நல்லமுத்துக்குமார் திருப்பதி சென்று வந்ததும் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அவர் கடத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக நல்ல முத்துக்குமார் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரை சல்லடை போட்டு தேடி வருகின்றனர். ஒரிரு நாட்களில் போலீசாரின் வலையில் நல்லமுத்துக்குமார் அகப்பட்டுவிடுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











