இந்தி கஜினி..சந்திரசேகர்..ரூ.5 கோடி!

தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் தயாரான படம் கஜினி. இந்தப் படத்தைத் தயாரித்தவர் சேலம் சந்திரசேகரன். இவர் தயாரித்த ஒரே வெற்றிப் படம் இதுதான்.
இந்தப் படத்தை இந்தியில் கீதா ஆர்ட்ஸ் தயாரித்தது. இது சிரஞ்சீவியின் மைத்துனருக்குச் சொந்தமானது. தமிழில் இயக்கிய முருகதாசே இந்தப் படத்தையும் இயக்கினார்.
சரியாக படத்தை வெளியிடும் நேரமாகப் பார்த்து, தன் அனுமதியின்றி படம் தயாரித்து விட்டதாக வழக்கு தொடர்ந்தார் சேலம் சந்திரசேகர். உடனே இடைக்காலத் தடை கோரினார்.
ஆனால் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்ட அந்தப் படத்தை வெளியிட்டால்தான் சிக்கலிலிருந்து தப்பிக்க முடியும் என கீதா ஆர்ட்ஸ் கூறியதால், ரூ.5 கோடியை நீதிமன்றத்தில் டெபாஸிட் செய்துவிட்டு ரிலீஸ் பண்ணுங்கள் என்று கூறிவிட்டது நீதிமன்றம்.
பின்னர் படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது. இந் நிலையில் இந்திப்பட வசூலில் சரிபாதி உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந் நிலையில், கீதா ஆர்ட்ஸ் டெபாஸிட் செய்த ரூ.5 கோடி தனக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி இன்னொரு மனுப் போட்டார். இந்தப் பணத்தை வாபஸ் பெறும் உரிமையை தனக்குத் தர வேண்டும் என கீதா ஆர்ட்ஸும் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி டி. முருகேசன், நீதிபதி சி.எஸ். கர்ணன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ. 5 கோடியை தயாரிப்பாளர் சந்திரசேகர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த வழக்கு முடியும் வரை ரூ. 5 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை அவர் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
சேலம் சந்திரசேகர் தொடர் தோல்விப் படங்கள் தந்ததால், தொடர்ந்து படமெடுக்க முடியாமல் சேலத்துக்கே போய்விட்டார். இப்போது கஜினி வழக்கு மூலம் பெரும் தொகையைப் பெற்றுள்ளார்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா?
கஜினியே ஒரிஜினல் கதை கிடையாது. மொமண்டோ படத்தின் அப்பட்டமான தழுவல். நியாயமாக அந்தப் பட உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தால் சேலம் சந்திரசேகர் என்ன ஆவார்?


Click it and Unblock the Notifications











