செம்மொழி மாநாடு: பிரபல நடிகர்கள் வரவில்லை!
கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் துவக்க நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட பிரபல நடிகர்கள் வரவில்லை.
முதல்வர் கருணாநிதி தலைமையில், கோவையில் நேற்று கோலாகலமாகத் துவங்கியது உலக தமிழ் செம்மொழி மாநாடு. இம்மாநாட்டிற்கு ஆயிரக்கணக்காணோர் வந்திருந்தனர்.
மாநாட்டில் சினிமா பிரமுகர்கள் திரளாக வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இவர்களுக்காக மட்டும் பல ஆயிரம் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததால், மாநாட்டுப் பந்தலில் முதல் வரிசையில் நடிகர் நடிகைகளுக்கென தனி பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் நடிகர்கள் பிரபு, சரத்குமார், பிரசாந்த், விஜயகுமார், தியாகராஜன், பிரகாஷ்ராஜ், ராஜேஷ், நடிகைகள் குஷ்பு, ராதிகா, இயக்குநர் கே.பாலசந்தர், கே.பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா உட்பட சிலர் மட்டுமே மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாடு முடிந்ததும், நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன், விஜயகுமார் ஆகியோர் மேடையில் முதல்வரை சந்தித்துப் பேசினர்.
நடிகர்களை காண, பேச, படம் எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் அனுமதிக்கவில்லை.
அதேநேரம் கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கமல் வெளிநாட்டில் படப்பிடிப்பில் உள்ளதால் பங்கேற்கவில்லை. இதர முன்னணி நடிகர்களும் முதல் நாள் நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை.


Click it and Unblock the Notifications











