நானும், அருண் விஜய்யும் தலைமறைவாகவில்லை-விஜயக்குமார் மறுப்பு

விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயக்குமார், மதுரவாயல் காவல் நிலையத்தில் தனது தந்தை, சகோதரர் அருண் விஜய், தங்கை கணவர் இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் மீது சரமாரியான புகார்களைக் கூறியுள்ளார். இந்த நிலையில் அதிரடியாக வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீஸார் கைது செய்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, டிஜிபி லத்திகா சரணை நேரில் சந்தித்து விஜயக்குமார் குடும்பம் மீது பல்வேறு புகார்களை சுமத்தி மனு அளித்தார்.
இதையடுத்து நேற்று மதுரவாயல் போலீஸார் விஜயக்குமார், அருண் விஜய் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், போலீஸார் விஜயக்குமார், மஞ்சுளா, அருண் விஜய்யை விசாரிக்க முடிவு செய்தனர். இதையடுத்து மூன்று பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது வீடுகளில் மூன்று பேரும் இல்லை. எங்கு போனார்கள் என்று தெரியில்லை.
அவர்களைப் போலீஸார் தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் தலைமறைவாகவில்லை என்று விஜயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் சில செய்தியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறுகையில், நான் ஹைதராபாத் வந்துள்ளேன். தலைமறைவாகவில்லை. ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புகிறேன். அன்று செய்தியாளர்களைச் சந்தித்து உண்மைகளைத் தெரிவிப்பேன்.
எனது மகன் அருண் விஜய் அமெரிக்காவில் இருக்கிறார். நாங்கள் தலைமறைவாகி விட்டதாக வனிதாதான் செய்தி பரப்பியுள்ளார். அவர் சொல்லும் எதிலும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் விஜயக்குமார்.


Click it and Unblock the Notifications











