லிப்ட்' விபத்து - நடிகர் அருண்பாண்டியனிடம் விசாரணை

ஆர்யா-திரிஷா நடிப்பில் உருவாகி வரும் சர்வம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை அண்ணா மேம்பாலம் அருகே பார்சன் வளாக கட்டிடத்தில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் ஆர்ட்' ஊழியர்கள் உதயகுமார், சிகாமணி, அப்பன்ராஜ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் படப்பிடிப்பிற்கு தேவையான மரக்கட்டைகளை தற்காலிகமாக அமைக்கப்பட்ட லிப்ட் வழியாக 8வது மாடிக்கு கொண்டு சென்றபோது, அது அறுந்து விழுந்தது. இதில் ஊழியர் உதயகுமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிகாமணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார். அப்பன்ராஜ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி லிப்ட் ஆப்ரேட்டர் முருகன் (45), படத் தயாரிப்பு நிர்வாகி சுந்தரராஜன் ஆகியோர் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்களாக கருதப்பட்ட துண்டலம் கிராமத்தை சேர்ந்த ஏஜெண்ட் சுகானந்தன், கோடம்பாக்கத்தை சேர்ந்த காண்டிராக்டர் மகேந்திரபாபு (41), அயனாவரத்தை சேர்ந்த லிப்ட் உரிமையாளர் சன்னாசி (51) ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் சர்வம் படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை கவனித்து வந்த நடிகர் அருண்பாண்டியனிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்துக்கு அருண்பாண்டியனும் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











