அடுத்த ஆண்டு 250 அரங்குகளை மூட வேண்டியிருக்கும்! - ஷாக் தந்த தியேட்டர் சங்கத்தினர்
சென்னை: இப்போதல்லாம் ஒரு படம் ஒரு நாள் ஓடுவதே கஷ்டமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு 250 தியேட்டர்களை மூட வேண்டி இருக்கும், என்றார் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர்.
தமிழகத்தில் தியேட்டர்களின் நிலைமை மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாக திரையுலகில் புலம்பல்கள் தீவிரமடைந்துள்ளன.

ஒரு பக்கம் மால்களில் மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. முன்பு கட்டப்பட்ட ஒற்றை அல்லது இரட்டைத் திரையரங்குகளோ காத்து வாங்குகின்றன. ஒரு காலத்தில் 2000 அரங்குகள் வரை இருந்த தமிழகத்தில் இப்போது 950 அரங்குகள் கூட இல்லை.
இந்த நிலையில் மேலும் பல திரையரங்குகள் மூடும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.
ஜிகிர்தன்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்துப் பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் திருச்சி ஸ்ரீதர் கூறுகையில், "தமிழ்நாட்டில், இப்போது 934 தியேட்டர்கள் உள்ளன.
பொங்கலுக்கு அப்புறம் வெளியான படங்களில், 'கோலி சோடா' மட்டும் வெற்றி பெற்று இருக்கிறது. மற்ற படங்கள் எதுவும் ஓடவில்லை.
வெள்ளிக்கிழமை காலையில் ஒரு படம் வெளியானால், அன்று இரவு காட்சிக்கு வேறு படத்தை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதே நிலைமை நீடித்தால், அடுத்த இரண்டு மாதங்களில் 250 தியேட்டர்கள் மூடப்படும்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











