பிறந்த நாளில் ரூ 25 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அபிராமி ராமநாதன்

பிரபல தயாரிப்பாளரான அபிராமி ராமநாதன் இன்று தனது 63 வது பிறந்த நாளை சென்னை அபிராமி மெகாமாலில் கொண்டாடினார்.
தனது பிறந்த நாளையொட்டி தான் பிறந்த சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூலான்குறிச்சி கிராமத்துக்கு சூரிய மின்சக்தியில் எரியும் 150 தெருவிளக்குகளை கிராமம் முழுவதும் பொருத்தத் தேவையான ரூ 21 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.
இதற்கான தொகையை பூலான் குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் சிங்காரம் செட்டியாரிடம் இயக்குநர் கே பாலச்சந்தர் மூலம் வழங்கினார் அபிராமி ராமநாதன்.
போலியோ தடுப்பு மருந்து போடுவதற்காக சென்னை மத்திய ரோட்டரி சங்கத்துக்கு ரூ 4.60 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார் அபிராமி ராமநாதன்.
அருவி என்ற ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த 75 சிறுவர் சிறுமிகளுக்கு இலவச உடைகள், இனிப்புகள் மற்றும் எழுதுபொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்கள் எல்எம்எம் முரளிதரன், சிவசக்தி பாண்டியன், பிலிம்சேம்பர் பொருளாளர் கே எஸ் சீனிவாசன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர்கள் பஞ்சு அருணாச்சலம், எஸ் பி முத்துராமன், சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு, ஆனந்தா எல் சுரேஷ், மனோஜ்குமார், எச் முரளி, கே ராஜன், அய்யப்பன், சுபாஷ் சந்திர போஸ், ஜெயக்குமார், இயக்குநர்கள் கே பாலச்சந்தர், பாலுமகேந்திரா, கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பாண்டியராஜன், நடிகர் சின்னி ஜெயந்த், திரையரங்க உரிமையாளர்கள் பன்னீர் செல்வம், ஈகா சீனிவாசன், கணபதிராம் ஜெயக்குமார், மகாராணி கோபால்தாஸ் உள்பட திரையுலகமே திரண்டு வந்து அவரை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியை அபிராமி மெகாமால் இயக்குநர் நல்லம்மை ராமநாதன் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக அபிராமி ராமநாதன் பேத்தி மீனாட்சி கடவுள் வாழ்த்துப் பாடினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மகள் மீனாட்சி பெரிய கருப்பன், பேரன் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











