செப் 15-ம் தேதி ஆஜராக நடிகை குஷ்புவுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசியது தொடர்பாக அவர் மீது மேட்டூரை சேர்ந்த வக்கீல் முருகன் என்பவர் 2005 நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும்போது அவர் மீது அழுகிய தக்காளி, முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டன.
இது குறித்து மேட்டூர் தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில், மேட்டூர் போலீசார் பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 40 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-1-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது குஷ்புவை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் கார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.
அதற்கு பா.ம.க. சார்பில் ஆஜரான வக்கீல்கள், குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்துக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-1-ல் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு, ஆகஸ்டு 25-ந் தேதிக்குள் நடிகை குஷ்பு கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நடிகை குஷ்பு நேற்று மேட்டூர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
இதையடுத்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதிக்குள் நடிகை குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











