ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின

நடிகையும், மணிரத்தினத்தின் மனைவியும், ராவணன் படத்தின் வசனகர்த்தாவுமான சுஹாசினி போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து திருட்டு விசிடிப் புழக்கம் தொடர்பாக புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து ராவணன் பட திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்ய காவல்துறைக்கு ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் உதவி கமிஷனர் விமலா ஆகியோரது மேற்பார்வையில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் புதுப்பட சி.டி.க்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தனிப்படையினர் மண்ணடியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு திருட்டு விசிடிக்களை தயாரித்துக் கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் சிக்கினார்.
அங்கிருந்து ராவணன் பட விசிடிக்கள் 3000 உள்பட மொத்தம் 5000 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 40 சிடி ரைட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிக்கிய மணிகண்டனை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல பர்மாபஜாரில் 1150 ராவணன் பட சிடிக்கள் சிக்கின. துரை என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல சுனாப் என்பவர் ராவணன், சிங்கம் உள்ளிட்ட படங்களின் திருட்டு விசிடிக்களை விற்றதற்காக கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











