சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைக் காண குவிந்த ரசிகர்கள்

ஆனாலும் ரஜினி தனி வழியில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை சென்றுவிட்டதால் அவரை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.
சென்னையிலிருந்து இரவு 11.30-க்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டார் ரஜினி. விமானம் வரை அவரது ஆம்புலன்ஸ் செல்ல சிறப்பு அனுமதி தரப்பட்டிருந்தது.
ரஜினி வருவது முன்கூட்டியே சிங்கப்பூரில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிட்டதால், ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து அந்த அதிகாலை நேரத்தில் காத்திருந்தனர்.
ஆனால் அதிகாலை 6 மணிக்கெல்லாம் ரஜினி தனி வழியில் விமான நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸே இதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ரஜினி வேறு வழியில் போய்விட்டார் என்பது தெரிந்ததும், சற்றும் அதிருப்தியடையாமல், அவர் விரைந்து உடல்நலம் பெற பிரார்த்தனை செய்தபடி ரசிகர்கள் கலைந்து சென்றதாக, சிங்கப்பூரில் உள்ள ரஜினி ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.
ரஜினியுடன் 7 டாக்டர்கள் அடங்கிய குழு பயணித்துள்ளது. ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், உதவியாளர் சுப்பையா ஆகியோரும் அவருடன் பயணித்தனர்.
பேரன்களுடன் இன்று சனிக்கிழமை சிங்கப்பூர் பயணமாகிறார் லதா ரஜினிகாந்த்.
சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷனில் அவர் சிகிச்சைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு ஒரு மருத்துவமனைக்கு அவர் செல்லக்கூடும் என்றும் தகவல் பரவியுள்ளது.


Click it and Unblock the Notifications











