தமிழ் சினிமாவால் பரவும் வன்முறை - மலேசிய அதிகாரி கவலை
தமிழ் சினிமாப் படங்களில் இடம் பெறும் வன்முறைக் காட்சிகளால் மலேசியா வாழ் தமிழர்களிடையேயும் அது பரவுகிறது என்று மலேசிய நாட்டின் பினாங்கு மாகாண நுகர்வோர் சங்க கல்வி அதிகாரி சுப்பாராவ் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாக்களில் பெருமளவில் வன்முறை உள்ளிட்டவை இடம் பெறுகிறது. இதைப் பார்க்கும் மலேசியா வாழ் தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள், அந்த வன்முறைப் பாதைக்குத் திரும்பும் அபாயம் அதிகரித்து வருகிறது.
தொட்டதெற்கல்லாம் அடிதடி, வன்முறை எனறு அவர்கள் இப்போது இறங்கி விடுகின்றனர். இதற்கு தமிழ் சினிமாப் படங்கள்தான் காரணம். அதில் வரும் ஹீரோக்கள் பெருமளவில் வன்முறைக் காட்சிகளில் இடம் பெறுவதால் அதைப் பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கெடும் வாய்ப்பு ஏற்படுகிறது.
மலேசியாவில் உள்ள தமிழ் இளைஞர்களிடையே முன்பை விட இப்போது அதிக அளவில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது கவலை தருகிறது. இதற்கு தமிழ் சினிமாப் படங்கள்தான் முக்கிய காரணம்.
இதுபோன்ற நிலையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, அரியல்வாதிகளும், அரசும், தமிழர் அமைப்புகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலேயே காலத்தை வீணடித்து வருகின்றன என்றார்.
மலேசியாவிலிருந்து வெளியாகும் மலேசிய நண்பன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் சுப்பாராவ்.
மலேசியாவில் வாழும் வம்சாவளி இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











