விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையும் பிரபல சினிமா தயாரிப்பாளர்!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளராகவும் பொறுப்பு வகிக்கிறார் காஜா மைதீன். தனது ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் சார்பில் 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேரும் நிகழ்வை, மிகப்பெரிய இணைப்பு விழாவாக நாளை (30-ந்தேதி) மாலை 4 மணிக்கு தியாகராயநகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் கலையரங்கில் நடத்துகிறார்கள்.
விழாவுக்கு திருமாவளவன் தலைமை வகிக்கிறார். அவருக்கு பொன்னாடை அணிவித்து விடுதலை சிறுத்தை கட்சியில் காஜாமைதீன் இணைகிறார்.
திரையுலகப் பிரமுகர்கள் வி.சி.குகநாதன், சிவசக்திபாண்டியன், ராதாரவி, ஆர்.கே.செல்வமணி, முரளிதரன், சித்ராலட்சுமணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாழ்த்திப் பேசுகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவது பற்றி காஜாமைதீன் கூறியதாவது:
"நானும் என்னைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நாளை இணைகிறோம். தலைவர் திருமாவளவனை சமீபத்தில் சந்தித்த போது அவரது அன்பும் அரவணைப்பும் சகோதரத்துவ ரீதியில் இருந்தது. அவரால் ஈர்க்கப்பட்டேன். எதிர்வரும் காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன். அது என் தொழில் எனக்கு முகவரி கொடுத்தது. தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன். அரசியலில் தலைவர் திருமாவளவன் கட்டளையை ஏற்று செயல்படுவேன்," என்றார்.
சில தினங்களுக்கு முன்பு, இனி தமிழ் சினிமாவே திருமாவளவன் கட்சியில் ஐக்கியமாகும் என்று லத்திகா பட தயாரிப்பாளர் சீனிவாசன் அறிவித்தது நினைவிருக்கலாம்!


Click it and Unblock the Notifications











