நெஞ்சைப் பதற வைக்கும் 'குருதி சிந்தும் தேசம்'!
வட இலங்கையின் வன்னிப் பகுதியில் நாளும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழர் பிணங்களைக் கணக்கெடுப்பது, ஏதோ காய்கறிகளை எண்ணுவது போல வெகு சாதாரணமாகிவிட்ட அவல சூழல்.
போர் முனையில் தமிழரின் அவல வாழ்க்கையை சர்வதேச சமுதாயத்துக்கும், சக தமிழருக்கும் எடுத்துக் காட்டிடும் வகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் களமிறங்கியுள்ளனர்.
அதன் முதல் கட்டமாக, A Bleeding Nation என்ற ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் சிறப்பு, இந்தப் படம் முழுக்க முழுக்க நார்வே மொழியில் தயாரிக்கப்பட்டதுதான்.
வி.தமிழன் மற்றும் திரவியன் பெரும் முயற்சி எடுத்து தங்கள் சொந்த செலவில் உருவாக்கியுள்ள இந்த ஆவணப் படம் இன்னும் சில மணி நேரங்களில் உலகத் தமிழர்களின் கைகளில் டிவிடி வடிவில் சேரப் போகிறது.
1500-ம் ஆண்டிலிருந்து இன்று வரை இலங்கை இனப் பிரச்சினையில் நடந்தது என்ன என்பதை இந்த ஆவணப் படத்தில் விவரித்துள்ளனர்.
மற்றொரு குறும்படம் 35 நிமிடம் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழர் பகுதியின் உண்மை மற்றும் மக்கள் படும் அவலங்களுடன் அவர்களின் கருத்துக்களும் இடம் பெறுகின்றன.
இந்த டிவிடிக்களை உருவாக்குவதற்கான செலவுகளை தமிழர் இணையம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் ஏற்றுள்ளன. அவர்கள் பெரும் முயற்சியால் நேற்றே ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவிடிக்களை விநியோகித்துள்ளனர். இன்னும் பல ஆயிரம் டிவிடிக்கள் வழங்கப்பட உள்ளனவாம். 'மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் http://www.tamildocumentary.org/ இணையத்தில் பார்க்கவும்' என்றார் வி.தமிழன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்தப் படத்தை நார்வே, ஆங்கிலம் மற்றும் தமிழில் கொண்டு வருவதாகத் திட்டம். முதலில் நார்வே மொழியில் வெளியில் விடுகிறோம். நார்வே மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழர் பற்றிய முதல் ஆவண மற்றும் குறும்படம் இதுதான்.
இந்தப் படத்துக்கு தமிழில் 'குருதி சிந்தும் தேசம்' என்று பெயர் சூட்டியுள்ளோம். என்னோடு திரவியன் மற்றும் நிலவன் ஆகியோர் கடுமையாக உழைத்துள்ளார்கள். ஈழத்து நிலைமை உலகுக்குச் சொல்வதே நோக்கம்.
தமிழகத்தில் இந்தப் படங்களை ஒவ்வொரு திரையரங்கிலும் திரைப்படங்களுக்கு முன்பு காட்ட திட்டமிட்டுள்ளோம். இன்று இந்த டிவிடிக்களை வெளியிடுகிறோம், என்றார் வி.தமிழன்


Click it and Unblock the Notifications