3 BHK Blue Sattai Maran Review: நல்ல கதையை நல்லா குழப்பீட்டாங்க.. 3 BHK ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் சாய் கணேஷ் இயக்கத்தில் நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், தேவயானி, ரிது ரகுநாத், சாய்த்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து நேற்று அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் 3 BHK. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தில் சரத்குமார் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பஸ்தன். அவருக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். வழக்கமாக நடுத்தர வர்க்க குடும்பத்தில் என்ன நினைப்பார்கள், எப்பாடு பட்டாவது, எவ்வளவு கஷ்ட்டப்பட்டாவது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும், அவர்களை நல்ல வேலையில் அமர்த்திவிட வேண்டும், வாழ்நாளில் சொந்த வீடு ஒன்று வாங்க வேண்டும் என நினைப்பார்கள். அது போலத்தான் சரத்குமாரும் நினைக்கிறார். இந்த நியாயமான ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தின் கதையோட்டமே எல்லோரையும் எளிதில் ஈர்க்ககூடிய கதையோட்டமாக எடுத்திருந்தார்கள். அதை முடிந்த அளவுக்கு ஒரு நேர்கோட்டில் சொல்லி இருந்தார்கள். அதாவது குடும்பத்தின் கஷ்டம். குழந்தைகள் படிக்கும் விதம், ஒரு குழந்தை ஒரு மாதிரியும் இன்னொரு குழந்தை வேறு ஒரு மாதிரியும் இருக்கும். வாடகை வீட்டில் இருக்க கூடிய பிரச்னைகள். எதிர் கொள்ளும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள், பணத்தை எப்படி சேமிக்கிறார்கள். இது போன்ற விஷயங்களை முதல் பாதியில் ஒரே நேர்கோட்டில் சொல்லிக் கொண்டு போனார்கள்.
குழப்பம்: ஆனால் இரண்டாம் பாதியில் கதை படக்குழுவினரே குழப்பி வைத்துவிட்டார்கள். இந்த படத்தின் முதல் பாதிக்கு தகுதியான இரண்டாம் பாதியாக, இரண்டாம் பாதி இல்லைவே இல்லை. கதையை விட்டு விலகி படம் எங்கெங்கோ சென்றுவிட்டது. தேவை இல்லாமல் பெண்ணின் குடும்பப் பிரச்னை, மகனின் தொழிலில் உள்ள குழப்பம் என படம் நகர்ந்துவிட்டது. இதுமட்டும் இல்லாமல் படத்தின் கதாநாயகன் சரத்குமாரா? சித்தார்த்தா? என்ற குழப்பம் அவர்களுக்கே வந்துவிட்டது. சரத்குமாரின் கதாபாத்திரமும் கதையோட்டமும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது.

மொத்தத்தில் படம்: ஆனால் கதையில் என்ன சொல்கிறார்கள் என்றால், சரத் எடுத்த தவறான முடிவுகளால் தான் குழந்தைகளின் வாழ்க்கை கெட்டுவிட்டது என்பது போலவும், அந்த வாழ்க்கையை குழந்தைகள் மாற்றி அமைத்துக் கொண்டது என்பது போலவும் கொண்டு போனதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. படத்தை உண்மைக்கு நெருக்கமாக எடுக்கிறேன் என நாடகம் போல எடுத்து வைத்து விட்டார்கள்.
என்ன பிரச்னை: கிளைமாக்ஸ் பார்க்கும்போது பேரதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு நேரம் நாம் பார்த்தது காசாகிராண்ட் விளம்பரமா என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. எல்லோருக்கும் கனெக்ட் ஆகக்கூடிய கதையை எடுத்து விட்டு, யாருக்கும் கனெக்ட் ஆகாத வகையில் படத்தை எடுத்து வைத்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூபாய் ஒரு கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











