கம்பத்தில் உலகத் திரைப்பட விழா தொடங்கியது: 9 நாடுகளைச் சேர்ந்த 15 படங்கள் திரையிடல்!
கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நிழல் திரைப்பட சங்கம், திரை இயக்கம் ஆகியன நடத்தும் கம்பம் உலகத் திரைப்பட விழா-2015, வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது
கம்பம் அமராவதி திரை அரங்கில் விழா தொடங்குவதற்கு முன், மாரியம்மன் கோயிலில் இருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் பேரணி நடைபெற்றது. பின்னர், அமராவதி தியேட்டர் முன்பாக மறைந்த இயக்குநர்கள் ருத்ரய்யா, கே. பாலசந்தர் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர்களது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தத் திரைப்பட விழாவில், அமெரிக்கா, இத்தாலி, சீனா, போலந்த், தைவான், பாலஸ்தீனம், ரஷ்யா, இந்தியா என 9 நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்கள் தொடர்ந்து 3 நாள்கள் திரையிடப்படுகின்றன.
முதல் நாள் காலை, தமிழ் திரைப்படமான ருத்ரய்யா இயக்கிய அவள் அப்படித்தான், ஏக் தின் பாரடைசின் என்ற பெங்காளி திரைப்படமும், லக்கி என்ற அமெரிக்கா திரைப்படமும், சினிமா பாரடைஸ் என்ற இத்தாலி திரைப்படமும், கோல்டன் ஈரா என்ற சீனப் படமும் திரையிடப்பட்டன.
மாலையில் நடந்த விழாவில், தமிழக அரசின் முன்னாள் தில்லி சிறப்புப் பிரதிநிதி பெ. செல்வேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், நடிகர் ஜோ. மல்லூரி, வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆண்டுதோறும் கம்பத்தில் உலகத் திரைப்பட விழா நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.
திரைப்பட விழாவையொட்டி, பிரபல திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











