புனித்தின் திடீர் மரணம்... அதிர்ச்சியில் உயிரைவிட்ட ரசிகர்கள்... சோகத்தில் மூழ்கிய கர்நாடகா!
சென்னை: நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மூன்று ரசிகர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் செல்லமாக அப்பு என்றும் பவர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று காலை வழக்கம் போல் ஜிம்மில் உடற் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை
இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புனித் ராஜ்குமார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சைப் பலனின்றி மரணம்
ஆனால் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். 46 வயதான புனித்தின் இந்த திடீர் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் உலுக்கியுள்ளது. புனித் இறந்துவிட்டார் என்ற தகவலை அறிந்ததுமே மருத்துவமனை முன்பு குவிந்த ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறினர்.

கண்கள் தானம்
அவரது மறைவுக்கு கன்னட சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளை சேர்ந்த பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புனித் தனது கண்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையின் அறக்கட்டளைக்கு தானம் செய்திருந்தார்.

கண்டீரவா மைதானம்
இந்நிலையில் அவர் மரணமடைந்ததும் அவருடைய இரு கண்களும் அவரது தந்தை ராஜ்குமாரின் அறக்கட்டளைக்கு தானம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சாரை சாரையாக அஞ்சலி
இறுதியாக புனித் ராஜ்குமாரின் முகத்தை பார்த்து விட வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் பெங்களூரில் குவிந்துள்ளனர். சாரை சாரையாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் புனித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் மரணம்
கண்டீரவா மைதானத்தை சுற்றிலும் 6000 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மூன்று ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை
கர்நாடகா மாநிலம், பெல்காம் நகரத்தைச் சேர்ந்தவர் 21 வயதான ராகுல். புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான இவர் அவரது மறைவு செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இதனால் சோகத்தில் மூழ்கிய ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அதிர்ச்சியில் மாரடைப்பு
இதேபோல், புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு முனியப்பன், பரசுராம் என்ற ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். புனித்தின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











