3 படத்தை தெலுங்கில் வெளியிட்டு பெரும் நஷ்டம் அடைந்தேன்- தயாரிப்பாளர் புகார்
தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்த 3 படம் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழில் பிரமாதமான ஓபனிங் இருந்தாலும், கலவையான விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது வாரம் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
இப்படம் ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. இதன் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி ரிலீஸ் செய்த ஆந்திர தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான நட்டி குமார் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
இந்த நஷ்டத்துக்கு காரணம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாதான் என அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தனுஷ்-ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு உரிமையை ரூ.4.3 கோடிக்கு வாங்கினேன். ஆந்திராவில் தனுசுக்கு உள்ள மார்க்கெட் ரூ.10 லட்சம்தான். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்குகிறாயே என்று பலரும் என்னை கண்டித்தனர்.
ரஜினி குடும்பத்தினர் மீது இருந்த நம்பிக்கையில் படத்தை வாங்கினேன். ஐஸ்வர்யா இயக்கி இருந்ததால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதினேன். 3 படத்தை ஆந்திராவில் விளம்பரபடுத்துவதற்காக ஏப்ரல் 1-ந்தேதி ஹைதராபாத் வருவதாக தனுஷும், ஐஸ்வர்யாவும் என்னிடம் உறுதி அளித்தனர். ஆனால் அதன்படி அவர்கள் வரவில்லை.
படத்தின் சிறப்பு காட்சிக்கு வருவதாக சொல்லியும் வரவில்லை. இருவரும் என்னை ஏமாற்றி விட்டனர். ஆந்திராவில் இந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் எனக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications












