வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக!

திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார் வடிவேலு. சில நேரங்களில் எல்லை மீறிப் பேசினாலும், மக்கள் அவரது பிரச்சாரத்தை ரசிக்கிறார்கள். எக்கச்சக்க கூட்டம் கூடுகிறது.
அத்தனை கூட்டங்களிலும் விஜயகாந்தை அவர் விளாசித் தள்ளுகிறார். இதற்கு என்ன பதில் தருவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அதிமுக கூட்டணியினர். காரணம் அங்கு மக்களை ஈர்க்கும் அளவுக்கு இருப்பவர்கள் இருவர் மட்டுமே. ஒன்ரு ஜெயலலிதா. அடுத்தவர் விஜயகாந்த்.
அதிலும் விஜயகாந்த் தனது வேட்பாளரை அடிப்பது, விஜய் ரசிகர்களைத் திட்டுவது என்று மக்களிடம் அதிருப்தியைக் கிளப்பி வருவதால், வடிவேலுக்கு இணையான ஒருவரை களமிறக்க முயன்றுவந்தனர்.
அவர்களிடம் வசமாக சிக்கியுள்ளவர் வடிவேலுவின் முன்னாள் நண்பராக இருந்து, அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் காமெடியன் சிங்கமுத்து. இந்த வழக்கில் இவர் கைதாகி புழல் ஜெயிலிலும் இருந்தார்.
இந்த இருவருக்குமான பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வடிவேலுவுக்குப் போட்டியாக பிரச்சாரத்தில் குதிக்கிறார் சிங்கமுத்து.
நாளை மறுதினம் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், "திரையில் வடிவேலுவை காமெடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அந்த முகத்தை தோலுறித்து காட்டத்தான் நான் வருகிறேன்", என்று தொண்டையைக் கனைக்கிறாராம் சிங்கமுத்து.


Click it and Unblock the Notifications











