ஆஸி. இனவெறி-டாக்டர் பட்டத்தை நிராகரித்த அமிதாப்

உலக பொழுதுபோக்குத் துறைக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய சேவையைப் பாராட்டி குவீன்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அமிதாப் பச்சனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது. ஜூலை மாதம் இந்த பட்டம் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதை தற்போது அமிதாப் நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். அதில்,
மிகுந்த அதிர்ச்சியுடனும், வேதனையுடனும் நான் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் இந்த சம்பவங்கள் டிவிகளில் தினசரி ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், என்னால் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்று அளிக்கும் கெளரவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நாட்டு மக்கள் அங்கு அவமானப்படுத்தப்பட்டு, மனிதாபிமானமே இல்லாத வகையில் தாக்கப்படும்போது அதை என்னால் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. அதை மறந்து விட்டு, என்னால் அந்த நாட்டில் தரப்படும் விருதை பெற முடியாது.
எனது நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் ஒரு நாட்டிடமிருந்து நான் கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெறுவதற்கு எனது மனசாட்சி அனுமதி தரவில்லை என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.


Click it and Unblock the Notifications











