போதையில் மிரட்டினார்: ராஜசேகர் மீது நீது புகார்!
குடி போதையில் என்னை கொல்லப் போவதாக மிரட்டினார் டாக்டர் ராஜசேகர் என்று நடிகை நீது சந்திரா புகார் கூறியுள்ளார்.
இதுதாண்டா போலீஸ் புகழ் டாக்டர் ராஜசேகர் நடிப்பில் அவரது மனைவி ஜீவிதா இயக்கும் தெலுங்குப் படம் சத்யமேவ ஜயதே. இதில் இந்தி நடிகை நீது சந்திரா நடித்து வருகிறார்.
இந்தியில் பிரபல மாடலான நீது தமிழில் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் படத்தில் நடித்து வருகிறார்.
திடீரென்று நிருபர்களைச் சந்தித்த நீது சந்திரா, டாக்டர் ராஜசேகர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அவர் கூறியதாவது:
சத்யமேவ ஜயதே படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் வந்திருந்தேன். திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டது. தினமும் 18 மணி நேரம் நடிக்க வேண்டியிருந்தது. எனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. அதற்குமேல் முடியாது எனப் புரிந்ததால், இரவு 11 மணியளவில் ஸ்டுடியோவிலிருந்து கிளம்பி, எனது ஓட்டலுக்குச் சென்றேன்.
சிறிது நேரத்துக்குள் ராஜசேகர், ஜீவிதா மற்றும் சிலர் எனது அறைக்குள் நுழைந்து என்னை அலற வைத்தனர். என் கையைப் பிடித்து ராஜசேகர் என்னை வெளியே இழுத்துச் சென்றார்.
லிப்டுக்குள் தள்ளி, 'நான் சொல்லும் வரை நடி. மீறி ஏதாவது செய்தால் உன்னை கொன்று விடுவேன்' என சத்தம் போட்டார். அந்த நேரத்தில் ராஜசேகர் குடித்திருந்தார்.
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காய்ச்சலிலும் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்தேன்.
பின்னர் உடனடியாக ரூமை காலி செய்துவிட்டு அதிகாலை 2.30 மணிக்கு விமான நிலையம் கிளம்பி விட்டேன். இயக்குநர் நம்மைப் போன்ற ஒரு பெண்தானே என நினைத்தேன். ஆனால் அவர் ராஜசேகரை விட மோசமானவர் என்பதைப் புரிந்து கொம்டேன்', என்றார் நீது சந்திரா.
மருந்து தான் கொடுத்தார்: ஜீவிதா
இதுகுறித்து ஜீவிதா கூறுகையில், நீது காய்ச்சல் எனக் கூறியதும் ராஜசேகர் ஒரு டாக்டர் என்ற முறையில் அவருக்கு மருந்து கொடுத்தார். திடீரென சொல்லாமல் ஷூட்டிங்கிலிருந்து சென்றுவிட்டார்.
இறுதிக்கட்ட ஷூட்டிங் நடக்கிறது. படத்தை ஜனவரி 15ம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும். அந்த டென்ஷனில் நான் சிறிது கோபமாக நீதுவிடம் பேசினேன். நீதுவின் செயலால் ராஜசேகர் மன உளைச்சலில் இருந்தார். 'நீ இப்படி நடப்பது சரியல்ல…' என்று மட்டுமே அவர் கூறினார். அவர் குடித்திருந்தார், மிரட்டினார் என்பதெல்லாம் அப்பட்டமான பொய், என்றார் ஜீவிதா.


Click it and Unblock the Notifications











