துபாயிலிருந்து திரும்பி மாயமான துணை நடிகை காதலர் வீட்டில் மீட்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்ட துணை நடிகை, திருவான்மியூரில் காதலனின் வீட்டில் இருந்து போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாக்குமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜா (35). சினிமா நடனக் கலைஞர். இவரது மனைவி மீனா (25) துணை நடிகை. இவர்களது மகன்கள் அஜீத் (8), ஆனந்த் (6). கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி, துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்காக, சில துணை நடிகைகளுடன் மீனாவும் ஒரு குழுவாக சென்றிருந்தார்.
துபாயில் 3 மாத கலை நிகழ்ச்சிகளை முடித்த குழுவினர், ஜூலை 22ம் தேதி பெங்களூர் வந்து இறங்கினர். அங்கிருந்து 23ம் தேதி காலை பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். மீனாவிற்காக விமான நிலையத்தில் காத்திருந்த ராஜா, மனைவியைக் காணாமல் திடுக்கிட்டு, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விமான நிலைய போலீசார் மீனாவின் மொபைல்போன் எண்ணை கண்காணித்தபோது, அவர் திருவான்மியூரில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ரியாஸ் என்ற உடற்பயிற்சியாளருடன் மீனா இருப்பது தெரிந்தது.
மீனாவிடம் நடத்திய விசாரணையில், என்னை யாரும் கடத்தவில்லை. நான் விருப்பப்பட்டு தான் ரியாஸ் உடன் வந்தேன். ரியாஸூடனே வாழ விரும்புகிறேன், என்றார்.
இந்நிலையில், அவரது மகன்களை பார்த்த உடன் மனம் மாறிய மீனா, கணவருடன் வாழ சம்மதித்தார். ரியாஸ், மீனா ஆகியோருக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications











