கற்பழிப்பு வழக்கு: நடிகர் சைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு சிறை
மும்பை: வேலைக்காரப் பெண்ணை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகர் ஷைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
பிரபல இந்தி நடிகர் ஷைனி அகுஜா (வயது 37). லைப் இன் எ மெட்ரோ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மும்பையில் வசித்து வரும் இவருக்கு திருமணமாகி அனுபம் என்ற மனைவியும், அர்ஷியா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் 13-ந் தேதி வீட்டில் மனைவியும், குழந்தையும் இல்லாத நேரத்தில், அங்கு வேலை பார்த்து வந்த 18 வயது வேலைக்காரப் பெண்ணை இவர் கற்பழித்து விட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அகுஜாவை கைது செய்தனர்.
புகார் கூறிய பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இந்த வழக்கில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி கிரிஜா வியாஸ் மும்பை வந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து வழக்கின் விசாரணையில் சூடுபிடித்தது. மூன்றே மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணை மும்பை விரைவு நீதிமன்றத்துக்கு 2009 ஆகஸ்டு மாதம் மாற்றப்பட்டது. அதன் பின்னர்தான் அகுஜாவுக்கு இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது.
அகுஜா, தான் நிரபராதி என்று கடைசி வரை சொல்லி வந்தார். அவரது மனைவியும் தன் கணவர் அப்பாவி என்று கூறி வந்தார். விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பி.எம். சௌகான் இந்த வழக்கை விசாரித்து வந்தார். விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தீர்ப்புக்காக விரைவு நீதிமன்றத்தில் ஷைனி அகுஜா ஆஜரானார். அவருடன் அவரது மனைவி அனுபமும் வந்திருந்தார்.
முடிவில் ஷைனி மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கருதிய நீதிபதி சௌகான், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
வேலைக்காரப் பெண் திடீர் பல்டி
இந்த வழக்கில் ஷைனி மீது புகார் கூறிய வேலைக்காரப் பெண், நீதிமன்றத்தில் ஆஜராகி தான் கற்பழிக்கப்படவில்லை என்று பிறழ் சாட்சியம் அளித்தார். ஆனாலும் நீதிபதி அதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பைக் கேட்டதும் கதறி அழுதார் ஷைனி.


Click it and Unblock the Notifications











