சன் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி

கோவை ஒப்பணக்காரவீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (40). கோவை ரமேஷ் என்ற பெயரில் சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். முன்பு விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் இவர்.
பெரும்பாலும் பெண் வேடத்தில்தான் இவர் வருவார். பல்வேறு பிரபல நடிகைகளின் குரலில் பேசுவது இவரது திறமை. குறிப்பாக சரோஜாதேவியைப் போலவே சிறப்பாக பேசி அனைவரையும் கவர்ந்தவர் ரமேஷ்.
கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்ற மோகன்குமார் (30). இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
கோவை ரமேஷ் தனக்குக் கிடைத்த புகழின் மூலம் பல்வேறு இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில், அவரும், மோகன் குமாரும், திருவாரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு ரமேஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் அசோக் ஆகியோர் காரில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
திருச்சி வந்ததும் காரில் இருந்து அசோக் இறங்கி விட்டார். பின்னர் ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் கோவை நோக்கி வந்தனர்.
நேற்று காலை 6 மணி அளவில் அவர்கள் காங்கேயம்-முத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, திடீரென்று கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் உடல் நசுங்கி இறந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி இறந்த கோவை ரமேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உடல்களை போலீஸார் மீட்டனர்.
லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











