Ravi Mohan: ப்ரோ கோட் டைட்டில் விவகாரம்.. ரவி மோகன் மீது மூன்றாவது வழக்கு.. மனுஷன் பாவம்ப்பா!
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது பெயரில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மூன்று படங்கள் தயாராகி வருகிறது. இதில் ஒரு படத்தை, அதாவது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தி ஆர்டினரி மேன் படத்தை ரவி மோகன் கதை, திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட முதல் படம் என்றால் அது, ப்ரோ கோட் படம் தான்.
ப்ரோ கோட் படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வருகிறது. படத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா என பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ப்ரோமோவில் இடம் பெற்றிருந்த பாடலான கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடல் ப்ரோமோவை அடுத்த லெவலுக்கு எலிவேட் செய்தது.

ப்ரோ கோட்: இந்நிலையில் படத்தின் டைட்டிலான ப்ரோ கோட் என்பதை பயன்படுத்தக் கூடாது என்று, டெல்லியைச் சேர்ந்த இண்டோ- ஸ்பிரிட் பேவரேஜஸ் என்ற மதுபான நிறுவனம், ப்ரோ கோட் படத்தின் மீது அதாவது தயாரிப்பாளர் ரவி மோகன் மீது வழக்கு தொடுத்துள்ளது. ப்ரோ கோட் என்பது அவர்களது மதுபானத்தின் பெயர் என்றும், அது அவர்களின் வர்த்தக முத்திரை என்றும், எனவே அதை அவர்கள் படத்திற்கு பயன்படுத்தினால், அது தங்களது வர்த்தகத்தை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
டைட்டில் விவகாரம்: முதலில் இந்த நிறுவனத்திற்கு எதிராக ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரவி மோகன் இந்த டைட்டிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர், அந்த நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாட, நீதிமன்றமோ, ப்ரோ கோட் என்ற டைட்டிலைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு பின்னர் ப்ரோ கோட் படக்குழுவினர் தரப்பில் வேறு எந்த அப்டேட்டோ, புரோமோஷனோ படத்திற்காக மேற்கொள்ளப்படவில்லை.

மூன்றாவது வழக்கு: இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த இண்டோ- ஸ்பிரிட் பேவரேஜஸ் என்ற மதுபான நிறுவனத்தின் சார்பில், ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது அதில், " ப்ரோ கோட் என்ற டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று இடைக்கால தடை விதித்த பின்னரும் அதன் விளம்பரங்களை ரவி மோகன் ஸ்டூடியோஸ் இன்னும் அகற்றவில்லை" என்று கூறி இந்த அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், " ரவி மோகன் ஒரு படம் தானே தயாரித்தார், அதற்காக அவரை டெல்லி உயர்நீதிமன்றம் வரை இழுத்துவிட்டு, மூன்று வழக்குகளை எதிர்கொள்ள வைத்துவிட்டீர்களே" என்று பேசி வருகிறார்கள். அண்மையில் அவரது சொகுசு பங்களாவுக்கு முறையான மாதாந்திரத் தவணை கட்டவில்லை என்று, வங்கி நிறுவனம் ஜப்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரவி மோகன் நடிப்பில் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பராசக்தி படம் வெளியாகவுள்ளது. இதில் அவர் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











