4 விருதுகளை வென்ற ‘அய்யப்பனும் கோஷியும்’..விருது வென்றும் கொண்டாட இயக்குநர் உயிருடன் இல்லாத சோகம்
திருவனந்தபுரம்: மலையாளத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்திற்கு 4 பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சச்சி இயக்கத்தில் 2020ம் ஆண்டு வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் இருவரும் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த சண்டைக் காட்சிகள் என 4 பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய விருது
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம், 4 தேசிய விருதுகளை தன்வசமாக்கியுள்ளது. மறைந்த இயக்குநர் சச்சியின் இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் இருவரும் லீடிங் ரோலில் நடித்திருந்தனர். ஈகோவினால் ஏற்படும் சிறிய மோதல், எப்படி மதம் பிடித்த யானையாக மாறி மனிதத்தை துவம்சம் செய்கிறது என்பதே இப்படத்தின் கதை. மனிதனுக்குள் திமிறிக் கொண்டிருக்கும் அறமற்ற வன்மத்தின் வீரியம் எப்படி இருக்கும் என திரையில் காட்சிகளாக விவரித்தது இத்திரைப்படம்.

பிருத்வியும் பிஜு மேனனும்
பிருத்விராஜும் பிஜூ மேனனும் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே இப்படத்தின் முதல் வெற்றி. இருவருக்கும் முதன்மை பாத்திரம் என்றாலும், அகங்காரமும் திமிரும் நிறைந்த வில்லன்களுக்கு இணையான மிக வித்தியாசமன பாத்திரங்கள். படம் பார்க்கும் அனைவருக்கும் இவர்களின் ஹீரோயிசத்தைக் கடந்து, இருவரது ஈகோவின் மேல் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருவர் மீது ஒரு வன்மைத்தை கக்கியிருப்பார்கள்.

இயக்குநர் சச்சி
'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் இயக்குநர் சச்சி, பல படங்களில் திரைக்கதை எழுதியுள்ளதோடு, பிருத்விராஜ் நடித்த 'அனார்கலி' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதுவே அவருக்கு முதல் படமாகவும், 'அய்யப்பனும் கோஷியும்' இரண்டாவது படமாகவும் அமைந்தது. 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்குவதற்கு முன்னர், பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'டிரைவிங் லைசென்ஸ்' படத்திற்கு கதை எழுதியிருந்தார் சச்சி. அந்தப் படத்தின் கதையும் இருவருக்கு இடையே நடக்கும் ஈகோ யுத்தம் தான். அதே ஈகோவை பின்னணியாகக் கொண்டே 'அய்யப்பனும் கோஷியும்' படத்தையும் வேறு வடிவத்தில் இயக்கி, ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

நஞ்சம்மாவின் கானம்
'கிழக்காத்த சந்தன மேரம் வெகுவாகப் பூத்துருக்கு' என்ற மலைகளின் அமுத குரலாக ஒலித்த இந்தப் பாடல் தான், 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் உயிர்நாடி எனலாம். நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா பாடிய இப்பாடல், பலரையும் வசியம் செய்து வாரியணைத்துக் கொண்டது. பிருத்விராஜ்ஜையும் பிஜூ மேனனையும் யாரென்ற ஒருவர், அவர்கள் நடித்த படத்தில் பாடலையும் பாடுவதென்பது எப்பேற்பட்ட மகத்தான விஷயம்

மிரட்டிய டெக்னீஷியன்ஸ்
'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பணிபுரிந்த அனைத்து டெக்னீஷியன்ஸும் அபாரமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாயின் இசை, சுதீப்பின் ஒளிப்பதிவு, ரஞ்சன் ஆப்ரகாமின் எடிட்டிங் என ஒவ்வொன்றும் படத்தின் திரைக்கதையை தாங்கிப் பிடித்தன. குறிப்பாக பிருத்விராஜ்ஜும் பிஜு மேனனும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சிகள் அச்சு அசலாக படு ஆக்ரோஷமாக படமாக்கப்பட்டிருந்தன.

தேசிய விருதுகள் போதாது
மனிதர்களின் ஈகோவை கதையின் அடிப்படையாக வைத்துக்கொண்டு 'அய்யப்பனும் கோஷியும்' போன்ற ஒரு படத்தை இயக்குவது அவ்வளவும் சாதாரணமானதல்ல. அதனை சாமர்த்தியமாக செய்து முடித்திருப்பார் இயக்குநர் சச்சி. அவருக்கு சிறந்த இயக்குநர் என்ற தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், இந்த தேசிய விருது சச்சியின் இழப்பை உணரச் செய்துள்ளது. அதேநேரம், 'அய்யப்பனும் கோஷியும்' சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

முழுமையான அங்கீகாரம்
நஞ்சம்மா சிறந்த பின்னணி பாடகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது, அதேபோல், சிறந்த சண்டைக் காட்சிகளுக்காகவும் தேசிய விருது கிடைத்துள்ளது. ஆனாலும், பிஜூ மேனனுக்கு சிறந்த துணை நடிகருக்கு பதிலாக, சிறந்த நடிகர் விருதே கொடுத்திருக்கலாம் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதேபோல், ஒளிப்பதிவு, பின்னணி இசைக்காகவும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கலாம் என பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











