ஏன் கண்டுக்கலை? சுஷாந்த் கணக்கில் இருந்து ரூ.50 கோடி.. மும்பை போலீஸ் மீது பீகார் டிஜிபி புகார்!
மும்பை: சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்கும் மும்பை போலீசார் மீது பீகார் டிஜிபு புகார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

38 பேரிடம் விசாரணை
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார், சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

சுஷாந்த் சிங் தந்தை
நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர், சுஷாந்தை நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் கூறி இருந்தார்.

கட்டாயத் தனிமை
அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, பல கோடி ரூபாய் வரை, ரியாவுக்குப் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி தலைமையில் பாட்னா போலீசார் மும்பை வந்துள்ளனர். அவர்களுக்குச் சரியான ஒத்துழைப்பு கொடுக்காத மும்பை போலீசார், வினய் திவாரியை கட்டாயமாகத் தனிமைப்படுத்தி உள்ளனர்.

பார்த்ததில்லை
அவருக்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மெஸ்சில் தங்குவதற்கான இடமும் ஒதுக்கவில்லை என்று பரபரப்பு புகார் எழுந்துள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான ஆவணங்களை கேட்டும் மும்பை போலீசார் கொடுக்கவில்லை. இதுபற்றி பேசிய பீகார் போலீஸ் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே, மும்பை போலீசார் போல ஒத்துழைக்காமல் இருக்கும் எந்த மாநில போலீசையும் நான் பார்த்ததில்லை என்று கூறியிருந்தார்.

கடந்த 4 வருடமாக
அவர்கள் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்த விசாரணையை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மும்பை போலீஸ் மீது புகாரையும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கடந்த 4 வருடமாக சுஷாந்த் சிங் கணக்கில் ரூ.50 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிசயமாக அவை அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

சும்மா விடப்போவதில்லை
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.17 கோடி அவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் இருந்து ரூ.15 கோடி திரும்ப எடுக்கப்பட்டுள்ளது. இது, இந்த வழக்கில் முக்கியமான விஷயமில்லையா? இதை ஏன் மும்பை போலீஸ் விசாரிக்கவில்லை. நாங்கள் சும்மா விடப்போவதில்லை. மும்பை போலீசை கேள்வி கேட்போம்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











