படங்கள் தோல்வி... ஆராயக் கூடுகிறது சங்கம்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், தொடர்ந்து தோல்வியடையும் படங்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இதுகுறித்து ஆராய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரும் 9-ம் தேதி கூடுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு தமிழ் திரையுலகின் இன்றைய நிலை என்ன? என்பது பற்றி விவாதிக்கிறார்கள்.
கடந்த வருடம் திரைக்கு வந்த 150 படங்களில், 10 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக அமைந்துள்ளன. மீதி படங்கள் அத்தனையும் தோல்வியை தழுவியதால், தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த தோல்விக்கு காரணம் என்ன? என்பது பற்றி பொதுக்குழுவில் விவாதிக்கப்படுகிறது. தோல்வியை தவிர்ப்பது எப்படி? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.
பையனூர் வீடுகள்
பையனூரில் அமைய இருக்கும் திரைப்பட நகரத்தில், வீடு கட்டக்கூடிய சூழ்நிலையில் எத்தனை தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்? என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் பொதுக்குழு கூட்டம், பிற்பகல் 2 மணி வரை நடைபெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications











