சின்னத்தம்பி தயாரிப்பாளர் கே பாலுவுக்கு 6 மாத ஜெயில்!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.பி.பிலிம்ஸ் உரிமையாளர் கே.பாலு. இவர் சின்னத்தம்பி, பாண்டித்துரை உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.
மற்றொரு சினிமா படம் தயாரிப்பதற்காக பெசன்ட்நகரைச் சேர்ந்த ரமேஷிடம் 2000-ம் ஆண்டு ரூ.20 லட்சம் கடன் வாங்கினார்.
அதை திரும்ப செலுத்துவதற்காக ரூ.10 லட்சத்துக்கான 2 காசோலைகளை (செக்) ரமேஷுக்கு கே.பாலு கொடுத்தார். இந்த காசோலைகள் வங்கியில் செலுத்தப்பட்டபோது, கே.பாலுவின் வங்கிக் கணக்கில் பணமில்லாததால் அவை திருப்பி அனுப்பப்பட்டன.
6 மாதமும் ரூ.20 லட்சமும்
இதுகுறித்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கே.பாலு மீது ரமேஷ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, கே.பாலுவுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதித்து 11.6.06 அன்று தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை செசன்சு கோர்ட்டில் கே.பாலு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு, கே.பாலுவுக்கு அளிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டது. ஆனால் ரூ.20 லட்சம் அபராத தொகை உறுதி செய்யப்பட்டது.
சரியான பரிசீலனை
செசன்ஸ் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.பாலு மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.மாலா விசாரித்தார்.
நீதிபதி மாலா தனது உத்தரவில், "இந்த வழக்கை சரியான முறையில்தான் மாஜிஸ்திரேட்டு, செசன்சு நீதிமன்றங்கள் பரிசீலித்துள்ளன. பணம் கேட்டு ரமேஷ் அனுப்பிய நோட்டீசுக்கு கே.பாலு பதிலும் அளிக்கவில்லை, கடன் தொகையை அவர் திருப்பியும் செலுத்தவில்லை.
எனவேதான் அவர் மீது செக் மோசடி வழக்கை ரமேஷ் தாக்கல் செய்தார். இந்த வழக்கை சரியான முறையில் கீழ் கோர்ட்டு அணுகியிருப்பதால், அந்த நீதிமன்றத்தின் உத்தரவில் குறுக்கிட அவசியம் இல்லை. எனவே அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.
கே.பாலுவுக்கு எதிராக செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அந்த தண்டனையை அனுபவிப்பதற்காக பாலுவை பிடிப்பதற்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











