விஜய் தந்தை செய்த குருதட்சணை.. எஸ்.பி.எம் காட்டிய நட்பு! வி.சி. குகநாதன் பகிர்ந்த எமோஷனல் போஸ்ட்
சென்னை: தமிழ் திரை உலகின் முன்னோடி இயக்குனர் எஸ்.பி முத்துராமனுக்கு அண்மையில் தமிழ்நாடு அரசு "கலைஞர் கலை வித்தகர் விருது" அளித்து கௌரவித்தது. இந்த விருதை பெற்ற கையோடு எஸ்.பி. முத்துராமன் தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரான வி.சி. குகநாதனை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, தனக்கு வழங்கப்பட்ட விருது குறித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வி.சி. குகநாதன் வெளியிட்டுள்ள பதிவானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் கலைஞர் கலை வித்தகர் விருது மூத்த இயக்குனர் எஸ் பி முத்துராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை காணொளி வாயிலாக கண்டுகளித்த எனக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த விருதினை நானே பெற்றிருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டேன். இது சத்தியம். கலை உலகில் என் முதல் நண்பர் முத்துராமன். என் ஒரே நண்பர் இதுவரை அவரே தான். எஸ் ஏ சந்திரசேகர் என் சிஷ்யன். நான் விரும்பும் ஒரே விஷயம் அவர் மட்டும்தான்.
ஆனால் முத்துராமன் நான் மதிக்கும் ஒரே நண்பர். இதுவரை நான் சண்டை போடாத ஒரே மனிதர் அவர்தான். என்னோடு வேலை செய்த உதவியாளர்கள் பல பேர் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியிருக்கிறார்கள். அதில் பஞ்சு அருணாச்சலம் முக்கியமானவர். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் எனக்கு நன்றி சொல்லி இருக்கிறார் கள்! எஸ் பி முத்துராமன் அவர்கள் என் நண்பர்.... அதனால் அவர் எப்போதும் எனக்கு நன்றி சொன்னதில்லை. ஆலோசனைகள் சொல்லி இருக்கிறார்... அறிவுரை சொல்லி இருக்கிறார்.... ஆத்மார்த்தமான அன்போடு பழகி இருக்கிறார். ஏவிஎம்மில் இருந்து ராஜினாமா செய்து விட்டு ஊருக்குப் போக இருந்த எஸ் பி முத்துராமனை தடுத்து நிறுத்தி திரைப்பட இயக்குனர் ஆக்கும் பாக்கியத்தை பெற்றவன் நான்.
எங்கள் கூட்டணியில் உருவான இரண்டாவது படம் பெத்த மனம் பித்து. அதன் நூறாவது நாள் விழாவை கலைஞர் அவர்கள் முன்னிலையில் ஏவிஎம் தலைமை ஏற்க ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் பெரிய விழாவாக கொண்டாடினேன். அதில் ஏவிஎம் அவர்கள் பேசும்போது முத்துராமன் தங்கள் வீட்டுப் பிள்ளை என்றார். கலைஞர் அவர்கள் பேசும்போது ஏ வி எம் அவர்கள் சொன்னது தவறு எஸ் பி முத்துராமன் அவர்கள் ராம சுப்பையா அண்ணனின் மகன் ஆவார். ஆதலினால் அவர் எங்கள் வீட்டுப்பிள்ளை என்று உரிமை கொண்டாடினார். முத்துராமன் அவர்களை இயக்குனர் ஆகிய என்னைப் பற்றி எதுவுமே பேசவில்லை. எனக்கு அப்போது அது பற்றிய சிந்தனை எழவே இல்லை. என் நண்பர் புகழப்பட்டது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே ஏற்படுத்தியது.

நட்பு: பின் நாட்களில் எந்த மேடையில் நான் இருந்தாலும் முத்துராமன் அவர்கள் என்னை இயக்குனர் ஆக்கியது குகநாதன் சார் தான் என்று கூறத் தவறியதே இல்லை. ஆனாலும் பின்னால் வந்த பாக்யராஜ் பாண்டியராஜன் பார்த்திபன் ஆகியோர் தங்களை உருவாக்கிய முன்னவர்களை நன்றி பாராட்டி பேசுவார்கள். அப்போது நான் சற்று கவலைப்படுவது உண்மைதான். சந்திரசேகர் மட்டும் தவறாது என்னை பார்க்க வருவார். பல நிகழ்வுகளில் உதவியாக இருந்திருக்கிறார். படைப்பாளி இயக்குனர்களை பெப்ஸியில் இணைக்க எஸ் எ சி ஒத்துழைப்பு தந்ததனால் மட்டுமே அது சாத்தியமானது.
குரு தட்சணை: என் தற்போதைய புதிய படத்தை 30 லட்சங்களுக்கு மேல் தன் சொந்தப் பணத்தில் செலவு செய்து உருமாற்றி தந்து விட்ட சந்திரசேகர் இது என் குருவுக்கான காணிக்கை. இதனை நீங்கள் திருப்பித் தர வேண்டாம் என்று சொன்னார். தன்மகன் விஜய் ஏறு முகமாக போய்க்கொண்டிருந்த காலத்தில் எனக்கு பத்ரி என்ற திரைப்படத்தை செய்து தந்தவர். என்னால் மறக்க முடியாத சிஷ்யன் அவர். நண்பர் முத்துராமன் எப்போதும் எனக்கு நன்றி சொன்னதே இல்லை. நான் அதனை எதிர்பார்த்தது இல்லை. இது கலைஞருக்கு பொறுக்கவில்லை போலும். அதனால் தன் பெயரில் ஒரு விரதம் 10 லட்ச ரூபாய் பணமும் தன் மகன் நடத்தும் தமிழக அரசு மூலமாக கொடுக்க வைத்து... அவற்றை சுமந்து கொண்டு நேற்று முத்துராமனை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் அந்த பரிசுகளை என் கையில் கொடுத்து அகமகிழ்ந்தார். இதற்கெல்லாம் நீங்கள் தான் முதல் காரணம் என்றார்.
கண் கலங்கிய எஸ்.பி.எம்: இது எனக்கு மட்டுமான விருது இல்லை என் வளர்ச்சியில் பங்கேற்ற அனைவருக்குமானது என்று சொன்னார். அடுத்து இதைப் பார்க்க சரவணன் சார் இல்லையே என இருவரும் வருத்தப்பட்டோம். இறுதியாக சார் நன்றி சார் என என் கைகளை பிடித்தபடி முத்துராமன் சொன்னார். நான் கலங்கிப் போய்விட்டேன். சின்ன வயதில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரிடம் காட்டினேன். அவர் கண்கள் கலங்கின.! பின்னர் கலைஞரும் நானும் உள்ள வரையப்பட்ட படத்தினை அவருக்கு பரிசாக வழங்கினேன்.
கருணை வளையம்: ஏனெனில் 60 ஆண்டு கால நட்பில் நான் எதிர்பார்த்த.... ஆனால் எதிர்பார்க்காத நன்றி என்ற வார்த்தையை விருதை கையில் கொடுத்து வீடு தேடி வந்து சொல்ல வைத்த.... கலைஞரின் கருணை வளையத்துக்குள் இருக்கும் நாம் இருவரும் மகிழ்ச்சி அடைந்தது உண்மை. அவர் முத்துராமன் நான் குகநாதன். குகன் என் கடமை ராமரை கரை சேர்ப்பது தானே? அதற்கு எதற்காக நன்றி சொல்ல வேண்டும். குகனோடு ஐவரானோம். அவருக்கும் இருப்பது நாலு தம்பிகள் தானே! என் தந்தையார் இறந்தபோது முத்துராமன் எழுதிய கடிதத்தில் அம்மா இருக்கிறார் கவலையை மறந்து விடுங்கள் என எழுதிய நல்ல நண்பர் என் முத்துராமன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications