வயநாடு மக்களுக்கு துணை நில்லுங்கள்.. 15வது ஃபிலிம் ஃபேர் விருதினைப் பெற்ற மம்மூட்டி வேண்டுகோள்
ஹைதராபாத்: 69வது SOBHA Filmfare Awards South 2024 நேற்று அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் தென் திரைப்படத் துறையினரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் சினிமாத் துறையில் திறமைகளால் முத்திரை பதித்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும் வகையில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி கலந்து கொண்டார். இவருக்கு நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட மம்முட்டி மிகவும் வருத்தமாகவே காணப்பட்டார். தொடர்ந்து பேசியவர் வயநாடு துயரச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

தென் மேற்கு பருவமழை காரணமாக வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது ஜூலை மாதம் 30ஆம் தேதி நள்ளிரவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர், இந்த இயற்கை பேரிடரில் காணாமல் போனார்கள். முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் இடுபாடுகளுக்குள் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தோண்ட தோண்ட உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

மீட்புப் பணிகள்: கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இதுவரை 300- க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த மோசமான வானிலையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. மண்ணும் மழை நீரும் கலந்து பல இடங்கள் சேறாக காட்சியளிக்கின்றன.

அது போல் வீடுகள், கட்டட இடிபாடுகளிலும் யாராவது உயிருடன் இருக்கிறார்களா, இல்லை ஏதாவது உடல்கள் கிடைக்கின்றனவா என தேடி வருகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

மம்மூட்டி: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மற்றும் அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஒத்துழைப்பு வழங்க தனது தொண்டு நிறுவனத்தினரை களத்திற்கு நேரடியாக அனுப்பினார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் மம்மூட்டி நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக்கொண்ட நடிகர் மம்மூட்டி,உற்சாகம் இல்லாமலே காணப்பட்டார்.

வயநாடு: மேலும் அவர் பேசுகையில், " இது எனக்கு 15வது ஃபிலிம் ஃபேர் விருது. இந்த விருது எனக்கு கிடைக்க காரணமான நண்பகல் நேரத்து படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் டெக்னீசியர்களுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் வயநாட்டில் நடந்துள்ள துயரச்சம்பவம் குறித்து தெரியும. பலர் தங்களது உயிரை இழந்துள்ளார்கள். மக்கள் தங்களது உறவினர்களை இழந்து பெரும் துயரத்தில் உள்ளார்கள். நீங்கள் அனைவரும் இந்த நேரத்தில் வயநாடு மக்களுக்காக துணை நிற்கவேண்டும். அந்த மக்கள் விரைவில் ஒரு சராசரி வாழ்வை வாழ நீங்கள் துணை நிற்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்" என பேசினார். மம்மூட்டி பேசியது தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











